Monday, November 9, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஈ

பெல்சியம் நாட்டிலுள்ள தோழியை காண இதற்கு அடுத்த வாரயிறுதியில் பயணித்தேன். நான் சென்ற அடுத்த நாள் பெல்சியம் நாட்டின் தலைநகரான புரூசல்ஸ் சுற்றிப்பார்க்க சென்றோம். தோழியின் தாயாரும் வந்திருந்ததால் மூவரும் சென்றோம். இங்கும் சுற்றுலா துறையின் ஹாப் ஆன் – ஹாப் ஆப் பேருந்தில் ஒரு நகர சுற்றுலாவினை முதலில் முடித்தோம். இந்த சுற்றின் கடைசி நிறுத்தமான ராயல் அரச மாளிகை எங்களின் முதல் நிறுத்தமானது. மாளிகையின் உள்ளே சென்று பார்த்தோம். நன்றாக பராமரிக்கின்றனர். உள்ளே புகைப்படங்கள் எடுக்கமுடியாது; ஆகையால் அவற்றை ரசித்து மனதினில் உள்வாங்கிக்கொண்டு வருவதுதான் ஒரே வழி. பல விடயங்கள் பிரம்மாண்டத்தை அளித்தது. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த சாண்டிலியர் விளக்குகள்கூட பிரம்மாண்டததை அளித்தது என்பது உண்மை. உள்ளேயே அறிவியல் அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளனர். குழந்தைகள் செய்து பார்க்கவென தனியாக சில விடயங்களையும் வைத்துள்ளனர். நன்றாக இருந்தது.





அங்கிருந்து கிளம்பி கிராண்ட் பிலேஸ் எனும் இடத்திற்கு சென்றோம். நடுவினில் பெரிய வெற்றிடம் விடப்பட்டு அதன் நான்கு பக்கங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்களான அவை பார்ப்பதற்கு புதியது போல பராமரிக்கப்பட்டு வரப்படுவது அதன் சிறப்பு. அவ்வளவு பழமையானவை என்பதை தோழியின் தாயார் முதலில் நம்பவில்லை. எனினும் அதற்கு சான்றுகளாக அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடம்தான் நகர மன்றமாக செயல்பட்டு வருகின்றது.



அந்த நகரின் மற்றொரு பார்க்க வேண்டிய இடமாக கூறப்பட்டிருந்த மேனக்கன் பிஸ் என்னும் சிறுவனின் சிலையை கண்டுவிட்டு அங்கிருந்து பார்க் சின்குவாண்டினயர் என்னும் பூங்காவிற்கு சென்றோம். அங்கே கட்டப்பட்டிருந்த நினைவு வளைவு முதல் சுற்றில் பார்த்தபோதே மனதில் இடம் பிடித்துக்கொண்டது. ஆகையால் அங்கே சில நேரம் செலவிட முடிவு செய்தோம். இளைப்பாற நல்லதொரு இடமாக அது அமைந்தது.




அடோமியம் என்னும் இடத்தினை பேருந்திலிருந்தே கண்டோம். அங்கே இறங்கி பார்த்து நேரம் செலவழிக்கவில்லை. அதற்கு பதில் பூங்காவில் சில மணி நேரங்கள் இளைப்பாறினோம். அங்கிருந்து கிளம்பிய பேருந்துதான் அந்த நாளின் கடைசி சுற்றுப்பேருந்தாக இருந்தபடியால் வேறெங்கும் செல்லாமல் அந்த நாளினை முடித்துக்கொண்டு வீட்டினை அடைந்தோம். மறுநாள் தங்கியிருந்த லியுவன் நகரினை சுற்றிக்காண்பித்தார். நகர மன்றங்கள் பல ஊர்களிலும் ஒரே மாதிரியான கட்டிட அமைப்புகளாய் இருந்ததை அங்கே காணமுடிந்தது.



மறுபடியும் சூளிச் சென்று ஒரு வார காலம் தங்கிவிட்டு அந்த வார இறுதியில் எனது இல்லம் வந்தடைந்தேன். பலவகையான இடங்கள், பல்வேறுப்பட்ட மனிதர்கள் என்று நல்ல அனுபவமாக இருந்தது. சில இடங்களை பார்த்தபோதே ஒருவித அமைதியும், மகிழ்ச்சியும் மனதினுள் குடிகொண்டது. அதனோடு நம்மால் ஏன் நமது இயற்கை செல்வங்களை பாதுகாக்க முடியவில்லை, எதனால் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை, சக மனிதர்களை அவர்கள் செய்யும் வேலையை பார்க்காமல் மனிதர்களாய் மட்டும் பார்க்கும் மனநிலை வரவில்லை போன்ற பல கேள்விகள் எழுந்ததை மறுக்கமுடியவில்லை.

Thursday, November 5, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - இ

சூளிச்சிலிருந்து ஒரு நாள் பயணமாக லக்ஸம்பர்க் நகரத்திற்கு/நாட்டிற்கு சென்று வந்தோம். சூமேக்கர் என்னும் ஒரு பயண ஏற்பாட்டாளர் மூலம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். எனவே பயணம் சிறிதளவு எளிதாக இருந்தது. சுமார் மூன்று மணி நேர பேருந்து பயணம். நாங்கள் சென்றது செவ்வாய்கிழமையாதலால் அதிகம் முதியோர்களை எங்கள் பேருந்தில் பார்க்க முடிந்தது. பயணம் துவங்கிய சிறிது நேரத்திலேயே விருந்தாக பல காட்சிகள் கிடைக்கப்போவது உறுதி என்று மனதில் தோன்றியது. இந்த விடயத்தில் தோன்றியது உண்மையாகவே அமைந்தது. வழியின் இரண்டு பக்கங்களிலும் செழிப்பான பசுமை. கூட்டம் கூட்டமாய் சிறு சிறு காடுகள் போல மரங்களும், புல்வெளி மைதானங்களும், விளை நிலங்களும் என்று மாறி மாறி வழியெங்கும் வியாபித்திருந்தது.


சுமார் பன்னிரெண்டரை மணியளவில் அந்த நகரின் மையப்பகுதியில் இறக்கிவிடப்பட்டோம். அந்த இடத்தில்தான் எவ்வளவு சுற்றுலா பயணிகள். பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்ட வண்ணம் இருந்தன. சுற்றுலா துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரசுற்றுலா பேருந்தில் சுற்றிப்பார்க்க சென்றோம்.





ஹாப் ஆன்-ஹாப் ஆப் என்னும் வசதி கொண்ட பேருந்துகள் இவை. அதாவது எங்கு வேண்டுமானாலும் ஏறி-இறங்கிக்கொள்ளலாம். ஆகையால் நமக்கு விருப்பமான இடங்களை இறங்கி பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் வந்து கொள்ளலாம். முதலில் சுமார் ஒரு மணி நேரம் முழுநகரையும் சுற்றி வந்தோம். அப்போதே எங்கெல்லாம் திரும்ப வரவேண்டுமென முடிவு செய்துகொண்டோம். நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால் அரச மாளிகை, பூங்கா, கோட்டை என்று முக்கியமான சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. மாளிகையின் உள்ளே செல்லவும் அந்த நேரம் உகந்தபடியில்லாததால் வெளியிலிருந்து சுற்றிப்பார்த்தோம்.





வார்த்தைகளால் விவரிக்க முடியாத விடயங்களையும் படங்கள் விவரித்துவிடும். எனவே புகைப்படங்களில் அங்கே கண்ட அழகை கையகப்படுத்திக்கொண்டோம். அங்கே கண்ட அழகினைவிடவும் மிகவும் கவர்ந்தது அங்கு சென்ற வழியில் கண்ட பசுமைதான் என்றால் மிகையாகாது. திரும்பி வரும்போது நகரின் வெளியே பேருந்தினை சில நிமிடங்கள் நிறுத்த இயற்கையை ஆற-அமர்ந்து இரசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. கண்டவற்றை அசைபோட்டுக்கொண்டே அந்த நாள் இனிதே நிறைவுற்றது.


ஹான்னோவரிலுள்ள இரண்டு நண்பர்களை காண ஒரு வார இறுதியில் நாங்கள் மூவரும் சென்று வந்தோம். பயணத்தில் அதிக நேரம் செலவானது. அங்கு இருந்ததோ சுமார் 27 மணி நேரங்கள்தான். எனினும் மிகவும் மகிழ்வாக இருந்தது. நாங்கள் ஐவரும் சில வருடங்களுக்கு பின்னர் ஓரிடத்தில் சந்திக்கின்றோம். ஆகையால் பல விடயங்களை அசைபோட்டு, பேசி என்று மகிழ்வாக சென்றது. நினைவில் என்றும் நிலைத்திருக்கும் தருணங்களில் இவையும் ஒன்றாக அமையும்.