Friday, December 11, 2009

புறப்பட்டுவிட்டேன்

நினைக்கையில் எனக்கே ஆச்சிரியமாக உள்ளது. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வந்ததுபோல உள்ளது; அதற்குள் ஓராண்டு முடிந்து கிளம்பிவிட்டேன். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நாட்கள் செல்லும் வேகமே தெரியாது என்பர். அதனை இப்போது நான் உணர்ந்தேன். இதற்கு எதிர்மறையாக இதற்கு முந்தைய ஆண்டு சென்றது. அப்போது தென்கொரியா வாசம். அந்த நாட்களில் எப்போது ஒவ்வோரு மாதமும் முடியும், எப்போது அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று எண்ணாத நாட்களே இல்லை எனலாம். எந்த அளவிற்கு புலம்பியுள்ளேன் என எனது நண்பர்கள் கூறுவார்கள். ஏனோ எந்த விதத்திலும் அந்த நாட்டில் இருந்தபோது மனம் மகிழ்வாகவோ, அமைதியாவோ இல்லை. அதற்கு எனது வேலையில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஒரு முக்கிய காரணம் எனலாம். மனதில் எந்நேரமும் ஒருவித பயத்துடன் பழகிய நாட்கள் அவை. எனது நெருங்கிய நட்பு வட்டாரமும், அங்கு கிடைத்த சில அருமையான நண்பர்களாளும் எப்படியோ அந்த ஆண்டை முடித்துக்கொண்டு அதற்கடுத்து பிரான்ஸ் வருவதை உறுதிபடுத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பிரான்ஸ் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என என் நண்பர்கள் கூறியிருந்ததால் மனதில் ஒருவித நம்பிக்கையுடனே வானூர்தி ஏறினேன். எனினும், மனதில் எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. பழைய அனுபவம்; எதிர்பார்ப்புடன் வந்து ஏமாற்றமடைய மனதில் தைரியம் இல்லை. ஆனால், இந்த வாழ்க்கை மிகவும் அமைதியாக இருந்தது. இங்கும் எடுத்த பணியில் சிக்கல்கள் இருந்தது. எனினும் அதனை எதிர்நோக்கவும், தவறு செய்யும்போதோ, குழம்பி தவிக்கும்போதோ நல்லவிதமாக ஆலோசனை கூறவும் சுற்றிலும் மக்கள் இருந்தனர். சிக்கல்களை புரிந்து கொண்டனர். அதுவே மிகவும் உற்சாகமூட்டுவதாகவும், தைரியமளிப்பதாகவும் இருந்தது.

கிடைத்த மகிழ்ச்சியில் நாட்கள் சென்றதே தெரியவில்லை.ஓராண்டு முடிந்துவிட்டது. இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரமும் வந்து கதவை தட்டிக்கொண்டிருக்கிறது. நல்லவேளையாக அடுத்து எங்கு, என்ன என்பதற்கு விடை கிடைத்துள்ளது. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட தோன்றாத எண்ணம் இப்போது அதிகமாகியுள்ளது. எப்போது வீடு வருவேன் என்ற எண்ணம். இதோ கிளம்பிவிட்டேன். அம்மாவின் சமையலை சுவைக்க, அப்பாவை பல இடங்களுக்கும் அழைத்துச்செல்ல, சொந்தங்களையும், நட்புக்களையும் காண புறப்பட்டு விட்டேன். இந்த தனிமையிலிருந்து சில நாட்களுக்கு விடுதலை. திங்கள் காலை சென்னையில். நினைக்கையில் மகிழ்வாக உள்ளது.

வீட்டினை ‘மிஸ்’ பண்ணவில்லையா என்றனர் சிலர். மூன்று வாரங்களுக்கு முன்புவரை ‘மிஸ்’ பண்ணவில்லை. இணையத்தின் வழியாக தினமும் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்ததால் அதிகமாக ‘மிஸ்’ பண்ணவில்லை. ஆனால், இப்போது மனதிலே எப்போது வீடுவருவேன் என்ற எண்ணம் பரவியுள்ளது. ஐரோப்பாவை ‘மிஸ்’ செய்வேனா என்றனர் நண்பர்கள். ஆம் கண்டிப்பாக ‘மிஸ்’ பண்ணுவேன். பல விடயங்கள் பிடித்திருந்தது; அதற்காக உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கேயேவெல்லாம் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களை கண்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சுவிட்சர்லாந்து, ரோம் நகரம். அது மட்டும் முடியவில்லை. நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. அந்த வருத்தத்தை மனதில் சுமந்துக்கொண்டு வேறுவிதமான மகிழ்ச்சியை தேடி சென்னையை நோக்கி செல்கின்றேன்.

- எழுதியது 29-11-09


இதோ வந்துசேர்ந்து பத்து நாட்களாகிவிட்டது. சென்னை மழையும் தனது தனித்தன்மையை காட்டிக்கொண்டிருக்கிறது. பலவிதமான பயண அனுபவங்களும் ஆரம்பமாகிவிட்டது. செல்லவேண்டிய இடங்களும், செய்துமுடிக்க வேண்டிய காரியங்களும் இம்முறை சற்று அதிகமாக உள்ளது. எப்போதும்போல மகிழ்வுடன் அவற்றை துவங்கிவிட்டேன். வேறு சில ஆசைகளும் உள்ளது- இணையத்தில் எழுத்துகளாய் மட்டுமே பார்த்த சிலரை கண்டு கலந்துரையாடவேண்டும், தொடர்ந்து வாசிக்கும் chennaitrekkers.org குழுவினருடன் சில இடங்களுக்கு செல்ல வேண்டும், இன்னும் சில. எனினும், முடியுமா என்று தெரியவில்லை. எவையெல்லாம் சாத்தியப்படுகின்றது என்று பார்க்கவேண்டும். வாய்ப்புகள் இருந்தாலும் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துவிடுவேன் என்பது மட்டும் எனக்கு சாத்தியமான ஒன்று. இருக்கும் இந்த சில நாட்களை தனிமையை தவிர்த்து அதிகமாக மக்களோடு செலவழிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த விடுமுறை நாட்களும் எப்போதும் போல வேகமாக சென்றுவிடும்.

இப்போதும் ஓராண்டு முடிந்துவிட்டதென்று நம்பமுடியவில்லை...

- எழுதியது 09-12-09

Wednesday, November 25, 2009

அடப்போங்க மக்கா....


காட்சி - 1

என்ன அவனுக்கு ஏதாவது வரன் வந்ததா?

எங்க...ஒன்னும் சரியா அமையமாட்டைங்குது.

அவன் ரொம்ப எதிர்பார்க்கிறான். இந்த காலத்தில பெண் கிடைப்பதே ரொம்ப சிரமமாயிருக்கு; அவன் என்னன்னா இப்படி வேண்டாம், இந்த படிப்பு வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அவன் கேட்கிற மாதிரியெல்லாம் பெண் கிடைக்காது. எல்லா விடயங்களும் ஒத்துப்போகாது. ஏதோ ஓரளவு ஒத்துப்போச்சுன்னா அதை முடிச்சிடனும். அதை விட்டுட்டு இப்படித்தான் பெண் வேண்டும்னா இப்படியே இருக்க வேண்டியதுதான் கடைசிவரைக்கும். கல்யாணமே நடக்காது. அவனுக்கு நீங்கதான் எடுத்துச்சொல்லனும்.

எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.


காட்சி - 2

தம்பி. இன்னைக்கு அவங்க பேசிக்கிட்டிருந்தாங்க.

ஓ...எப்படி இருக்காங்க? என்ன சொல்றாங்க?

அவங்க நல்ல இருக்காங்க. உன் திருமணத்தை பற்றித்தான் விசாரிச்சாங்க.

ஓ...

உன்னோட எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்காம். அப்படியெல்லாம் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காதாம். வருகின்ற வரன்ல ஏதாவது ஒன்றை முடிக்க சொல்றாங்க.

ம்..இது என்ன கடைக்கு போய் துணி வாங்கவருவது மாதிரி நினைத்து கொண்டு சொல்கிறார்களா? கிடைத்ததை முடிங்கறதிற்கு. துணிகூட பிடித்தால்தான் வாங்கறோம். அப்படி இருக்கும்போது இது வாழ்க்கைத்துணை. அவங்க பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி பார்த்தாங்கனு நமக்கு தெரியும்ல. அவங்களும் பயங்கர செலக்டிவ்வாதானே இருந்தாங்க/இருக்காங்க. ஒவ்வொரு விடயத்தையும் தேடித்தேடிதானே பார்த்தாங்க/பார்த்துகிட்டிருக்காங்க. எந்த அளவுக்கு சமரசம் செய்துகொண்டாங்க. அவங்க பிள்ளைகளுக்குனா அப்படியெல்லாம் தேடி வரன் பார்க்கலாம். ஆனால், நான் கொஞ்சம் படிப்பிலே செலக்டிவ்வா இருக்கறது தப்பா?

என்ன செய்வது? நீ கேட்கிறது போல கிடைக்க மாட்டைங்குதே. அதான் சொல்றாங்க.

கிடைக்கும், கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளலாம்; அதற்கு நான் எப்பவும் தயார். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்க்கையையே சமரசமா ஆக்கிக்க முடியாது. இந்த விடயத்திலும் நிறைய சமரசம் செய்துவிட்டேனென்று உங்களுக்கே தெரியும். நான் அவர்களின் கல்வித்துறை சார்ந்த விடயத்தில் மட்டும்தான் எதிர்பார்ப்போடு இருந்தேன்/இருக்கேன். அந்த எதிர்பார்ப்பு கூட இருக்கக்கூடாதுனா எப்படி? என்ன, இதனால் வரன் கிடைக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகுது. காத்திருக்கும் நாட்கள் அதிகமாகுது. அவ்வளவுதான்.

சரி..எப்ப நேரம் வருகின்றதென்று பார்ப்போம்.

கண்டிப்பா வரும். நீங்க தைரியமா நம்பிக்கையோட இருங்க.

(ஏன் இப்படி தம் பிள்ளைகளின் (மகன்/மகள்) எதிர்பார்ப்பு எப்போதும் சரியென்பது போலவும் மற்ற பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எல்லை மீறியது என்பது போலவும் சிலர் மனதில் எண்ணம் ஏற்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. தனக்கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயமா? அடப்போங்க மக்கா...)