Thursday, May 7, 2009

இல்லங்களில் ஏனிந்த சண்டைகளோ???

“எங்க அப்பவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை”; “எங்க அம்மா என்ன சொன்னாலும் புரிஞ்சிகவே மாட்டேன் என்கிறார்கள். நல்லா கத்திட்டு வந்துவிட்டேன்.” இந்த மாதிரியான விசயங்களை நாம் ஒருமுறையாவது கேட்டிருப்போம்; இது போன்ற சூழ்நிலையையும் தாண்டி வந்திருப்போம். இது வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் நடக்கும் ஒன்று. ஏன் இப்படி? என் முன்னே பலமுறை வந்துசெல்லும் ஒரு கேள்வி இது.

பிள்ளைகள் பதின்ம வயது அடையும்போது அவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்க்கும் இடையே இவ்வாறான கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கும். அப்போது தொடங்குவது ஒருவித வயதுகோளாறினால் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு பின்பும் இந்தவித பிரச்சனைகள் வராமல் இல்லை. தலைமுறை இடைவெளியின் காரணமாக கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அதனை சம்பந்தப்பட்டோர் நேருக்கு நேர் பேசிக்கொண்டால் எப்படியும் தீர்த்துக்கொள்ளலாம். அதனை விடுத்து அவரவர்களும் தங்கள் கருத்திலேயே விடாப்பிடியாக நின்றுகொண்டிருந்தால் பிரச்சனை தீராமல் சண்டையில்தான் முடியும். பல இல்லங்களில் இதுமாதிரியான சூழல் நீடிக்கிறது. இதன் காரணமாக உறவுமுறைகளில் ஒருவித இடைவெளி ஏற்பட்டுவிடும். ஒரு சில நேரங்களில் “நான் சொன்னால் உன் பிள்ளை கேட்கமாட்டான்(ள்), நீயே கூறிவிடு” என பெற்றோரும், “நான் என் அம்மாவிடம்தான்/ அப்பாவிடம்தான் எதையுமே கூறுவேன், மற்றவரிடம் கூறினால் சண்டைதான் வரும்” என பிள்ளைகளும் ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறார்கள். இப்போது இருக்கும் தனிக்குடித்தின முறையில் வீட்டில் இருப்பதே அதிகபட்சமாக நான்கு பேர்தான்; அதனில்லும் குழுக்களாகி போய்கொண்டேயிருந்தால் எங்கே செல்கிறோம் என்றே புரியவில்லை. இருக்கும் சிறு வட்டத்திற்க்குள் இன்னுமொரு குறுகிய வட்டம். விசாலமாகவேண்டிய மனம் ஏனோ குறுகிகொண்டே போகின்றது. இதன் விளைவு மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

அனைவருக்குமே மற்றவரை குறைகூறுதல் மிகவும் எளிது. ஆனால் இன்று குறைகூறும் பிள்ளைகள் தங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து அவர்கள் அந்த பெற்றோருடன் சண்டையிடும் போதுதான் பெற்றோரின் வலி தெரியும். பிள்ளைகளாய் பெற்றோர் மீது பழி சுமத்தலாம்; சண்டையிடலாம்; பேச்சினையும், உறவினையுமே முறித்துக்கொள்ளலாம். இளமை செருக்கினால் இதனை செய்கிறார்கள். வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை அவர்கள் அப்போது புரிந்துகொள்வதில்லை. அந்த பிள்ளைகளும் பெற்றோராகி அவர்தம் பிள்ளைகள் அவ்வாறு நடக்கும் சமயத்தில், தாங்கள் செய்த பிழையை எண்ணி வருத்தப்படலாம். ஆனால் அதனை சரிசெய்து அன்பு பாராட்ட அவர்தம் பெற்றோர் இருப்பார்களா என்பது சந்தேகமே. காலம் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுயநலத்தாலும் வரட்டு பிடிவாதத்தினாலும் உறவுகளை இழப்பது வாழ்க்கையின் அர்த்தத்தை இழப்பது போன்றது. ஆறரிவு பெற்ற மனிதராக பிறந்துவிட்டு இவ்வாறான தவறை செய்வது முறையே இல்லை.

நாம் யாருமே மரணமின்றி நிலையாக இவ்வுலகில் வாழ்ந்துவிட போவதில்லை. அனைவருமே சில காலங்கள்தான் வாழப்போகிறோம். இருக்கும்போது அன்பு பாராட்டாமல் மறைந்தபின் சொல்லி அழுது என்ன பயன்? உயிரற்ற உடலோடு பேசி என்ன பயன்? போனவர் திரும்பி வரப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் பெற்றோர் – பிள்ளைகள் எனில் அதன் தாக்கம் சொல்லி புரிந்து கொள்ளமுடியாது. சரியாக யோசிக்காமல் தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்க்கை முழுதும் வருந்தி என்ன பயன்? நம்மோடு இருப்பவர்களோடு மனம்விட்டு பேசுவோம். எதையுமே ஒருவித நடுநிலையோடு யோசிப்போம். நம் கருத்தில் நியாயம் இருப்பின் அதனை சரியான முறையில் மற்றவர்களுக்கு புரிய வைப்போம். புரிய வைப்பதிலும், புரிந்து கொள்ளுதலிலும்தான் வாழ்க்கையின் நிலையான மகிழ்ச்சி உள்ளது. விரோதம் தவிர்த்து அன்பு பாராட்டுவதில்தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே. இந்த தரணியில் இருக்கும்வரை நம் வாழ்வை நல்லவிதமாக வாழ்வோம்.

3 comments:

பதி said...

மணி,

ஒரே பீலிங்ஸ்ஸா இருக்கு மணி !!!!! :)))))

rathinapugazhendi said...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை வேறு விதமாக சொல்லி இருக்கிறீர்கள் நல்லது

மணிநரேன் said...

பதி - பீலிங்ஸ் இல்லாமல் நம்மால் வாழமுடியாதே.

நன்றி இரத்தினபுகழேந்தி.