Friday, December 11, 2009

புறப்பட்டுவிட்டேன்

நினைக்கையில் எனக்கே ஆச்சிரியமாக உள்ளது. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வந்ததுபோல உள்ளது; அதற்குள் ஓராண்டு முடிந்து கிளம்பிவிட்டேன். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நாட்கள் செல்லும் வேகமே தெரியாது என்பர். அதனை இப்போது நான் உணர்ந்தேன். இதற்கு எதிர்மறையாக இதற்கு முந்தைய ஆண்டு சென்றது. அப்போது தென்கொரியா வாசம். அந்த நாட்களில் எப்போது ஒவ்வோரு மாதமும் முடியும், எப்போது அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று எண்ணாத நாட்களே இல்லை எனலாம். எந்த அளவிற்கு புலம்பியுள்ளேன் என எனது நண்பர்கள் கூறுவார்கள். ஏனோ எந்த விதத்திலும் அந்த நாட்டில் இருந்தபோது மனம் மகிழ்வாகவோ, அமைதியாவோ இல்லை. அதற்கு எனது வேலையில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஒரு முக்கிய காரணம் எனலாம். மனதில் எந்நேரமும் ஒருவித பயத்துடன் பழகிய நாட்கள் அவை. எனது நெருங்கிய நட்பு வட்டாரமும், அங்கு கிடைத்த சில அருமையான நண்பர்களாளும் எப்படியோ அந்த ஆண்டை முடித்துக்கொண்டு அதற்கடுத்து பிரான்ஸ் வருவதை உறுதிபடுத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பிரான்ஸ் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என என் நண்பர்கள் கூறியிருந்ததால் மனதில் ஒருவித நம்பிக்கையுடனே வானூர்தி ஏறினேன். எனினும், மனதில் எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. பழைய அனுபவம்; எதிர்பார்ப்புடன் வந்து ஏமாற்றமடைய மனதில் தைரியம் இல்லை. ஆனால், இந்த வாழ்க்கை மிகவும் அமைதியாக இருந்தது. இங்கும் எடுத்த பணியில் சிக்கல்கள் இருந்தது. எனினும் அதனை எதிர்நோக்கவும், தவறு செய்யும்போதோ, குழம்பி தவிக்கும்போதோ நல்லவிதமாக ஆலோசனை கூறவும் சுற்றிலும் மக்கள் இருந்தனர். சிக்கல்களை புரிந்து கொண்டனர். அதுவே மிகவும் உற்சாகமூட்டுவதாகவும், தைரியமளிப்பதாகவும் இருந்தது.

கிடைத்த மகிழ்ச்சியில் நாட்கள் சென்றதே தெரியவில்லை.ஓராண்டு முடிந்துவிட்டது. இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரமும் வந்து கதவை தட்டிக்கொண்டிருக்கிறது. நல்லவேளையாக அடுத்து எங்கு, என்ன என்பதற்கு விடை கிடைத்துள்ளது. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட தோன்றாத எண்ணம் இப்போது அதிகமாகியுள்ளது. எப்போது வீடு வருவேன் என்ற எண்ணம். இதோ கிளம்பிவிட்டேன். அம்மாவின் சமையலை சுவைக்க, அப்பாவை பல இடங்களுக்கும் அழைத்துச்செல்ல, சொந்தங்களையும், நட்புக்களையும் காண புறப்பட்டு விட்டேன். இந்த தனிமையிலிருந்து சில நாட்களுக்கு விடுதலை. திங்கள் காலை சென்னையில். நினைக்கையில் மகிழ்வாக உள்ளது.

வீட்டினை ‘மிஸ்’ பண்ணவில்லையா என்றனர் சிலர். மூன்று வாரங்களுக்கு முன்புவரை ‘மிஸ்’ பண்ணவில்லை. இணையத்தின் வழியாக தினமும் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்ததால் அதிகமாக ‘மிஸ்’ பண்ணவில்லை. ஆனால், இப்போது மனதிலே எப்போது வீடுவருவேன் என்ற எண்ணம் பரவியுள்ளது. ஐரோப்பாவை ‘மிஸ்’ செய்வேனா என்றனர் நண்பர்கள். ஆம் கண்டிப்பாக ‘மிஸ்’ பண்ணுவேன். பல விடயங்கள் பிடித்திருந்தது; அதற்காக உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கேயேவெல்லாம் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களை கண்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சுவிட்சர்லாந்து, ரோம் நகரம். அது மட்டும் முடியவில்லை. நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. அந்த வருத்தத்தை மனதில் சுமந்துக்கொண்டு வேறுவிதமான மகிழ்ச்சியை தேடி சென்னையை நோக்கி செல்கின்றேன்.

- எழுதியது 29-11-09


இதோ வந்துசேர்ந்து பத்து நாட்களாகிவிட்டது. சென்னை மழையும் தனது தனித்தன்மையை காட்டிக்கொண்டிருக்கிறது. பலவிதமான பயண அனுபவங்களும் ஆரம்பமாகிவிட்டது. செல்லவேண்டிய இடங்களும், செய்துமுடிக்க வேண்டிய காரியங்களும் இம்முறை சற்று அதிகமாக உள்ளது. எப்போதும்போல மகிழ்வுடன் அவற்றை துவங்கிவிட்டேன். வேறு சில ஆசைகளும் உள்ளது- இணையத்தில் எழுத்துகளாய் மட்டுமே பார்த்த சிலரை கண்டு கலந்துரையாடவேண்டும், தொடர்ந்து வாசிக்கும் chennaitrekkers.org குழுவினருடன் சில இடங்களுக்கு செல்ல வேண்டும், இன்னும் சில. எனினும், முடியுமா என்று தெரியவில்லை. எவையெல்லாம் சாத்தியப்படுகின்றது என்று பார்க்கவேண்டும். வாய்ப்புகள் இருந்தாலும் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துவிடுவேன் என்பது மட்டும் எனக்கு சாத்தியமான ஒன்று. இருக்கும் இந்த சில நாட்களை தனிமையை தவிர்த்து அதிகமாக மக்களோடு செலவழிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த விடுமுறை நாட்களும் எப்போதும் போல வேகமாக சென்றுவிடும்.

இப்போதும் ஓராண்டு முடிந்துவிட்டதென்று நம்பமுடியவில்லை...

- எழுதியது 09-12-09