Friday, September 10, 2010

காத்திருந்த பயணம் - இ

அன்று பிரதோச தினம். சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று மாலை மன்னார்குடியிலுள்ள சித்தி வீட்டிற்கு செல்லும் திட்டம். மேலும், மாலை மன்னார்குடிக்கு அருகிலுள்ள பாமினி என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றுவர வேண்டும் என்று என் அப்பா விரும்பியபடியால் அவ்வாறே திட்டமிட்டிருந்தோம். குடந்தை வந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு மாலை மன்னை நோக்கி பயணமானோம்.

பாமினி - மன்னையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ளது. பழங்காலத்தைய சிவத்தலமாகும். சென்று சேரும்போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மழை தூரிக்கொண்டேயிருந்ததால் சுவாமி புறப்பாடு அன்று இல்லை. எனினும் தரிசனம் நன்றாக கிடைத்தது. அப்பாவிற்கு எல்லோரையும்விட மிகுந்த மகிழ்ச்சி என்று எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்றைய தினம் மன்னையில் அலவலாவிக்கொண்டு இனிதே முடிந்தது.

அடுத்த நாள் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் வைத்திருந்தோம். மேலும் அன்றிரவு சென்னையும் திரும்ப வேண்டும். ஆகையால் சீக்கிரமே மன்னையிலிருந்து கிளம்பி முதலில் குருஸ்தலமான ஆலங்குடி சென்றடைந்தோம். நாங்கள் சென்றது குருபெயர்ச்சிக்கு முதல்நாள். ஆலயத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன. எங்களுக்கு நேரம் மிக குறைவாக இருந்ததால் சீக்கிரமாக குருதரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்றடைந்தோம்.


எவ்வளவு பெரிய கோயில் அது. பார்ப்பதற்கே மலைப்பாகத்தான் இருந்தது. ஏற்கனவே சிலமுறை சென்றிருந்தாலும் அம்முறை சென்றபோதும் பிரம்மிப்பேற்படுத்தியது. அதிக மக்கள் கூட்டம் இல்லாததால் இறையின் நிறைவான தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை வந்து அவர்களிடம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுவிட்டு, சென்னை செல்லும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் கிளம்பியது அப்பாவின் சொந்த ஊரான திருக்களாச்சேரி நோக்கி. அங்கு அவர்கள் வாழ்ந்த வீடும் இப்போது எங்களுக்கு சொந்தமில்லை. எனினும் அங்கு செல்வது எங்களில் சிலருக்கு ஒரு அலாதியான இன்பத்தை அளிக்கும். அதன் காரணமாக அந்த பயணம்.

செல்லும் வழியில் திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். சிவபெருமான் சரபேஸ்வரராக காட்சியளிக்கும் ஆதிஸ்தலம். அங்கும் சுவாமியின் நிறைவான தரிசனம் கிடைத்தது. எல்லாமே மிகவும் விஸ்தாரமான கோயில்கள்.



( வாயில் தூண்களில் கண்ட சிற்பங்கள்)

அங்கிருந்து கிளம்பி எங்கள் கிராமம் சென்றடைய மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகிவிட்டது. மயிலாடுதுறை தாண்டியதும் மழை கொட்டித்தீர்த்துவிட்டதால் மெதுவாகத்தான் செல்லமுடிந்தது. எடுத்துச்சென்ற உணவினை அந்த வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கள் ஊர் நாகநாதஸ்வாமி ஆலயத்திற்கு மூன்று மணிக்குமேல் சென்றோம். அன்று சங்காபிஷேகம் எனவும் நாங்கள் வந்தது மகிழ்ச்சி எனவும் அங்கிருந்த குருக்கள் கூறிக்கொண்டிருந்தார்.


தாத்தா, பாட்டி கிட்டத்திட்ட இறுதிவரை வாழ்ந்த ஊரிற்கு செல்வதே எனக்கெல்லாம் தனிசுகம்தான். அவர்கள் வீட்டுப்பிள்ளை என்று அடையாளப்படுத்தும்போது மகிழ்வாகவே இருக்கும். தரிசனம் முடித்துக்கொண்டு தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அளவளாவிவிட்டு புறப்பட்டோம். அந்த பயணத்தில் வரும்வழியில் சிலமுறை சென்றுள்ள திருக்கடையூருக்கும், அதுவரை செல்ல வாய்ப்பே கிடைக்காத சிதம்பரம் கோயிலுக்கும் சென்றுவரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கேயே மாலை நான்கு மணியாகியபடியாலும், இரவு எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்ற காரணத்தாலும் ஆலய தரிசனத்திற்காக வழியில் எங்கும் நிறுத்தாமல் சென்னை நோக்கி செல்வது என்று முடிவு செய்யப்பட்டு கிளம்பினோம். சிதம்பரம், சீர்காழி எல்லாம் மற்றொரு வாய்ப்பிற்காக தள்ளிவைக்கப்ட்டது. வழியில் பண்ருட்டி அருகே உணவினை முடித்துக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை சென்றடைந்தோம்.

பல ஆண்டு கனவான குலதெய்வ தரிசனமும், மேலும் பல கோயில்களும் கண்டதில் மனம் நிறைவாக இருந்தது. குடும்பத்தினர் பலரும் சேர்ந்துவந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்றும் மனதில் அசைப்போட்டுக்கொண்டேயிருக்ககூடிய பயணமாய் இது அமைந்தது.

Wednesday, September 8, 2010

காத்திருந்த பயணம் - ஆ

கூந்தலூர் - எங்களின் பூர்வீகமான ஊர் என்று அப்பாவும், தாத்தாவும் சொல்லி கேள்விபட்ட இடம். எனது தாத்தாவரை அங்குதான் பிறந்துள்ளார்கள். பின்னர் தாத்தாவின் அப்பாவின் கர்ணம் (கணக்காளர்) வேலையின் பொருட்டு மயிலாடுதுறை பகுதியிலுள்ள திருக்களாச்சேரி என்னும் கிராமத்தில் குடிபெயர்ந்துவிட்டனர். என் அப்பா பிறந்து வளர்ந்த ஊரெல்லாம் அதுவே. ஆகையால் கூந்தலூர் செல்வது எனக்கு அதுவே முதன்முறையாகும்.

கேள்விபட்ட பூர்வீக ஊரை பார்க்கப்போவதில் ஒருவித ஆர்வம் மேலோங்கியே இருந்தது. குடந்தை மற்றும் சென்னையிலுள்ள உறவுகள் சூழ செல்வதில் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வண்டி பற்றாத நிலை. மற்றொரு மகிழுந்துவையும் ஏற்பாடு செய்து கொண்டு கூந்தலூர் நோக்கி புறப்பட்டோம். நாங்கள் செல்வதற்கு முன்னரே அந்த கோயில் பூசாரியிடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லியிருந்தோம். சிறிய கிராமங்களிலுள்ள ஆலயத்தில் நினைத்த நேரத்தில் சென்று பூசாரியை பார்த்து அனைத்து வேலைகளையும் செய்வது என்பது மிகுந்த கடனமான காரியமாகும். இரண்டு-மூன்று கோயில்களுக்கு சேர்த்து ஒரு பூசாரியோ/குருக்களோதான் இருப்பார்கள். ஆகையால் முன்னேற்பாட்டுடன் சென்றோம்.




காவிரியின் ஒரு கிளைநதியின் கரையில் அந்த கோயில் அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைப்பெற்று ஆலயம் சிறப்பாக இருந்தது. பூசாரி சந்நிதியினுள்ளே அம்மனின் அபிஷேக ஏற்பாடுகளை கவனிக்க, எங்கள் மக்கள் சந்நிதியின் வெளியே பூசைக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடலானர். முந்தைய காலங்களாக இருந்திருந்தால் காவிரியில் நீர் எடுத்துவந்து சுத்தம் செய்து பூசைக்கான வேலைகளை செய்திருப்பார்களாம். எங்கள் பாட்டி இருந்த காலத்தில் அவ்வாறுதான் எல்லாம் நடந்ததாக எனது அண்ணன் கூறினார். இப்போதோ பாட்டியும் இல்லை, காவிரியில் அவ்வளவு தண்ணீரும் இல்லை. அவர்கள் இருக்கும்போது வந்திருந்தால் மகிழ்ச்சி பலமடங்காக இருந்திருக்கும். கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக மகிழ்ச்சி அடைந்துக்கொண்டோம். கோயிலிலேயே அடிபம்பு அமைத்துவிட்டதால் தண்ணீருக்கு கவலையில்லை.


அந்த இடத்தை சுத்தம் செய்து அம்மா, பெரியத்தை போன்றோர் பூசைக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க சின்னத்தை போன்றோர் அம்மன் பாடல்கள் பாட ஆரம்பித்தனர். பூசைகளில் முக்கியமாக படைப்பது மாவிளக்கு மாவும், காப்பரிசியும், பழங்களும்தான். மாவிளக்கு மாவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒருகாலத்தில் உரலில் இடித்து மாவு பிசைவார்கள். இப்போதெல்லாம் உரலும் இல்லை; அதற்கான தெம்பும் இல்லை. எல்லாம் அறிவியல் இயந்திரமயம்தான். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. அம்மனின் அலங்காரம் முடியவும், பூசைக்கான படையல்கள் தயார் செய்துமுடிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு நெய்வேதியம் செய்து தீபாராதனை காட்சி காணப்பெற்றோம். பலஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி வீட்டினர் அனைவருக்கும். பூசைகள் முடிந்த பின்னர் எடுத்து சென்றிருந்த உணவினை அங்கேயே முடித்துக்கொண்டோம். இந்த கட்டுசாப்பிட்டிற்கான சுவை வேறு எதிலும் கிடைப்பதேயில்லை. கண், மனம் மற்றும் வயிறு நிறைந்து புறப்பட தயாரானோம்.

வண்டியில் ஏறியதும் யாரோ ஒருவரின் அழுகை கேட்டது. கொஞ்சம் அதிர்ச்சியில் என்னவென்று பார்த்தபோது வண்டியில் ஏறும்போது கால்பிசகியதால் வலியில் என் அம்மாவின் கண்களில் கண்ணீர். எங்களுக்கு அதுவும் ஒரு ஆச்சிரியம்தான். இதுவரை தனக்கு எந்தவொரு வலிவந்தாலும் அழுது பார்த்ததேயில்லை. பெரிதாக அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு கிளம்பினோம்.


அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றோம். மழை தூறிக்கொண்டே வந்ததால் அங்கும் அவர்கள் கால் தடுமாறி வழுக்கி விழும் சம்பவமும் நடந்தது. நல்லவேளையாக பலத்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆலயத்திலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை நோக்கி கிளம்பினோம். கிளம்பிய நேரம் பெருமழை பிடித்துக்கொண்டு விடாது பெய்து தீர்த்துவிட்டது.

Tuesday, September 7, 2010

காத்திருந்த பயணம் - அ

பயணங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கும் விடயம். சில இடங்களுக்கு நினைத்தவுடன் சென்றுவர முடிந்துவிடுகிறது; சில இடங்களுக்கு ஒருசில மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பயணத்தை பொறுத்தவரை சுமார் முப்பது வருட காத்திருப்பு இதன் பின்னால் இருந்துள்ளது. சென்ற ஆண்டு திசம்பரில் நான் ஊருக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் இம்முறை எப்படியேனும் இந்த பயணத்தை மேற்கொண்டுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.அவ்வாறு நாங்கள் செல்ல விரும்பியது எங்கள் குலதெய்வ கோயிலுக்கு.

கூந்தலூர் - கும்பகோணம் (குடந்தை) அருகில் எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள அம்மன்தான் குலதெய்வம்.இத்துனை ஆண்டுகளில் பலமுறை குடந்தைக்கும், சொந்த ஊரான மயிலாடுதுறைக்கும் சென்று வந்திருந்தாலும் கூந்தலூர் செல்வது மட்டும் கைகூடாமலேயே இருந்தது. எல்லாவற்றிற்கும் நேரங்காலம் வரவேண்டுமென்று சொல்வது உண்மையோ என்று எண்ணவைக்கிறது.

குடந்தையை அடித்தளமாக வைத்து பயண ஏற்பாடுகள் செய்யத்துவங்கினோம். சில நெருங்கிய உறவுகளையும் அழைத்துக்கொண்டோம். இரயிலில் இடம் கிடைக்காததால் வேன் எடுத்துச்செல்வது என்று முடிவாயிற்று. நான்கு குடும்பமாக சென்னையிலிருந்து கிளம்பி குடந்தையிலுள்ள அத்தையின் வீட்டிற்கு செல்வது என முடிவாயிய்று. ஒரு பொடியனுக்கு உடல் நலமில்லாததால் அந்த குடும்பம் எங்களுடன் வரமுடியவில்லை. குடந்தைக்கு தனியாக வண்டியெடுத்து செல்வதால் செல்லும் வழியில் வடலூர் சென்றுவிட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.வடலூர் இராமலிங்க அடிகளார் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் ஒருவித பற்று சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தைக்கு ஏற்பட்டது.ஆகையால் வடலூர் செல்ல வேண்டும் என்ற அவாவும் சில ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. அது நிறைவேறவும் இதுதான் உற்ற சமயம் போன்று தோன்றியது.

திசம்பர் 12.ஆம் தேதி காலையில் நாங்கள் ஏழு பேர் சென்னையிலிருந்து கிளம்பினோம்.வழியில் எடுத்து சென்ற காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சுமார் பதினோரு மணியளவில் வடலூர் சென்றடைந்தோம். முதன்முறையாக சென்றதாலும், குறிப்பிட்ட கால அவகாசமே இருந்ததாலும் சத்திய ஞான சபைக்கு மட்டுமே சென்றோம். சென்ற நேரம் சந்நிதி மூடப்பட்டிருந்தாலும் அடுத்த அரை மணிநேரத்தில் திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் கூறியபடியால், தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தீர்ந்தது. அங்கு குழுமியிருந்தவர்களில் வயதான ஒருவர் தொடர்ந்து சுவாமிகளின் பாடலை பாடிக்கொண்டிருந்த்தார். அந்த நிலையிலேயே அவரை புகைப்படம் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.




குறித்த நேரத்தில் தீப தரிசனம் கிடைக்கப்பெற்றோம். மிகுந்த நிறைவாக இருந்தது.சிறிது நேரம் அந்த வளாகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு குடந்தை நோக்கி பயணமானோம். செல்லும் வழியில் சில ஆச்சிரியமான விசயங்களும் அறியெப்பெற்றேன். ஏதோ பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அந்த பாட்டை பள்ளியில் பாடி முதல் பரிசு வாங்கியதாக எங்கள் அம்மா கூறினார். இன்பதிர்ச்சி. அம்மாவிற்கு இசையில் நாட்டமுண்டு, பாடவெல்லாம் தெரியும் என்பதே அப்போதுதான் எங்களுக்கு தெரியும். மேலும், ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் என் தம்பி அந்த விசயத்தைபற்றி சில விடயங்கள் சொன்னான். அவனுக்கும் அந்தமாதிரியெல்லாம் பேசமுடியும் என்பதையே நாங்கள் அப்போதுதான் கண்டோம். அவன் எப்போதும் விளையாட்டுத்தனமாய் இருப்பதால் பல விடயங்கள் அவனுக்கு தெரியாது என்று நாங்கள் தவறான கணக்கு போட்டு வைத்திருந்தோம். சில தெரியாத விடயங்கள் இந்த பயணத்தில் அறியப்பெற்றோம். குடந்தையில் அனைவரையும் ஓராண்டிற்கு பின்னர் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சுவையான உணவுடனும், அளவளாவலுடனும் மதிய நேரம் கழிந்தது.

கூந்தலூர் செல்வது பிரதானமாக இருந்தாலும் அதனூடே பல ஆலயங்களுக்கும் செல்வதும் எங்களின் திட்டமாக இருந்தது. பலமுறை குடந்தை சென்றிருந்தாலும் வெகுசில ஆலயங்களுக்கே இதுவரை சென்று வந்துள்ளோம். ஆகையால் அன்று மாலை அங்கிருந்த சில உறவுகளையும் அழைத்துக்கொண்டு தாராசுரம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை ஆகிய தலங்களுக்கு சென்றோம். அதுவரை தெளிவாக இருந்த வானிலை தாராசுரத்தில் இறங்கியவுடன் மாறத்துவங்கி மழை தூற ஆரம்பித்துவிட்டது.

தாராசுரம் பல சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சிவத்தலமாகும். இதற்கு முன்னர் எப்போது சென்றேன் என்பது நியாபகமில்லை. மேலும், இம்முறைதான் புகைப்படக்கருவி இருந்தது. ஆகையால் நிறைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டிருந்தேன். மழை வந்து அந்த ஆசையை குலைத்துவிட்டது. எனினும் குடைக்குள்ளிருந்து வெகுசில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆலயத்தில் அங்குமிங்குமாக சில மக்களை மட்டுமே காண முடிந்த்தது. இவ்வாறான ஊர்களில் உள்ள கோயில்களில் சாதாராண நாட்களில் செல்வதிலுள்ள ஒரு வசதியெனில் அது அதிக கூட்டமில்லாமையாகும். அதனால் அடித்துபிடித்து முன்டியடித்து தரிசனம் செய்யத்தேவையில்லை. போங்க-போங்க என்று விரட்டும் மனிதர்களும் இருக்கமாட்டார்கள்.ஆகையால் நின்று நிதானமாக நிம்மதியான தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.




பின்னர் அங்கிருந்து கிளம்பி பட்டீஸ்வரம் சென்றடைந்தோம். அங்கே வாசலிலேயே வீற்றிருக்கும் துர்க்கையம்மன் பிரசித்தமாகும். அந்த மாலைவேளையில் மிகுந்த அலங்காரத்துடன் அழகாக காட்சியளித்தார். பிற சந்நிதிகள் கோயிலின் உட்புறத்தில் இருந்தது. சென்றுவந்தோம். அமைதியாக அதிக ஆள்நடமாட்டமில்லாமல் இருந்தது. மழை தூறிக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு திருவலஞ்சுழி சென்றோம்.

திருவலஞ்சுழியில் வெள்ளை விநாயகர் பிரசித்தம். சென்ற நேரம் மின்சாரம் தடைப்பட்டுபோனது. கற்பூர தீபயொளியில் நிறைவான காட்சி கிடைக்கையில் மின்சாரமும் வந்து அந்த நிமிடத்தை மேலும் நிறைவாக்கியது. விநாயகர் சந்நிதியே வாசலிலிருந்து நல்ல தூரத்தில் இருக்கும். பின்னர்தான் தெரிந்தது அதன்பின்புறம் சிவப்பெருமான் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் மேலும் உள்ளடங்கி இருப்பது. சென்று தரிசித்து வந்தோம். தீபங்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாராசுரம் போல இங்கும் மனித நடமாட்டம் இல்லை. இதுதான் கிராமங்களிலுள்ள கோயில்களின் நிலை பெரும்பாலும். ஆலயங்களை கட்டிய அரசர்கள் என்ன நினைப்பில் இவற்றை எழுப்பியிருப்பார்கள். அவர்கள் இன்றைய நிலையில் இக்கோயில்கள் இருப்பதை பார்த்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கபோவதில்லை. எத்துனை மக்கள் இவ்வாறான ஆலயங்களுக்கு வந்து சென்றிருக்க வேண்டும். இப்போது எப்படியுள்ளது.... அங்கிருந்து சுவாமிமலை முருகனை தரிசிக்க சென்றோம். கிட்டத்திட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் சென்றேன். சுவாமிநாதனின் அருமையான தரிசனம் கிடைக்கப்பெற்றோம். அனைவருக்கும் மனம் மிகவும் மகிழ்வாய் இருந்தது.அன்றைய தினத்தை அங்கிருப்பதிலேயே பெரியவரின் பிறந்தநாளை கொண்டாடியும், அடுத்த நாள் கூந்தலூர் செல்வதற்கான ஏற்பாடுகளை முடித்துக்கொண்டும் உறங்கச்சென்றோம்.

(பி.கு.: கடந்த ஆறு மாதங்களாக எழுத நினைத்து கடந்த இரண்டு நாட்களில் எழுதிய பயணத்தொடரின் முதல் பகுதி.)