Friday, September 10, 2010

காத்திருந்த பயணம் - இ

அன்று பிரதோச தினம். சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று மாலை மன்னார்குடியிலுள்ள சித்தி வீட்டிற்கு செல்லும் திட்டம். மேலும், மாலை மன்னார்குடிக்கு அருகிலுள்ள பாமினி என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றுவர வேண்டும் என்று என் அப்பா விரும்பியபடியால் அவ்வாறே திட்டமிட்டிருந்தோம். குடந்தை வந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு மாலை மன்னை நோக்கி பயணமானோம்.

பாமினி - மன்னையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ளது. பழங்காலத்தைய சிவத்தலமாகும். சென்று சேரும்போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மழை தூரிக்கொண்டேயிருந்ததால் சுவாமி புறப்பாடு அன்று இல்லை. எனினும் தரிசனம் நன்றாக கிடைத்தது. அப்பாவிற்கு எல்லோரையும்விட மிகுந்த மகிழ்ச்சி என்று எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்றைய தினம் மன்னையில் அலவலாவிக்கொண்டு இனிதே முடிந்தது.

அடுத்த நாள் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் வைத்திருந்தோம். மேலும் அன்றிரவு சென்னையும் திரும்ப வேண்டும். ஆகையால் சீக்கிரமே மன்னையிலிருந்து கிளம்பி முதலில் குருஸ்தலமான ஆலங்குடி சென்றடைந்தோம். நாங்கள் சென்றது குருபெயர்ச்சிக்கு முதல்நாள். ஆலயத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன. எங்களுக்கு நேரம் மிக குறைவாக இருந்ததால் சீக்கிரமாக குருதரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்றடைந்தோம்.


எவ்வளவு பெரிய கோயில் அது. பார்ப்பதற்கே மலைப்பாகத்தான் இருந்தது. ஏற்கனவே சிலமுறை சென்றிருந்தாலும் அம்முறை சென்றபோதும் பிரம்மிப்பேற்படுத்தியது. அதிக மக்கள் கூட்டம் இல்லாததால் இறையின் நிறைவான தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை வந்து அவர்களிடம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுவிட்டு, சென்னை செல்லும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் கிளம்பியது அப்பாவின் சொந்த ஊரான திருக்களாச்சேரி நோக்கி. அங்கு அவர்கள் வாழ்ந்த வீடும் இப்போது எங்களுக்கு சொந்தமில்லை. எனினும் அங்கு செல்வது எங்களில் சிலருக்கு ஒரு அலாதியான இன்பத்தை அளிக்கும். அதன் காரணமாக அந்த பயணம்.

செல்லும் வழியில் திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். சிவபெருமான் சரபேஸ்வரராக காட்சியளிக்கும் ஆதிஸ்தலம். அங்கும் சுவாமியின் நிறைவான தரிசனம் கிடைத்தது. எல்லாமே மிகவும் விஸ்தாரமான கோயில்கள்.



( வாயில் தூண்களில் கண்ட சிற்பங்கள்)

அங்கிருந்து கிளம்பி எங்கள் கிராமம் சென்றடைய மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகிவிட்டது. மயிலாடுதுறை தாண்டியதும் மழை கொட்டித்தீர்த்துவிட்டதால் மெதுவாகத்தான் செல்லமுடிந்தது. எடுத்துச்சென்ற உணவினை அந்த வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கள் ஊர் நாகநாதஸ்வாமி ஆலயத்திற்கு மூன்று மணிக்குமேல் சென்றோம். அன்று சங்காபிஷேகம் எனவும் நாங்கள் வந்தது மகிழ்ச்சி எனவும் அங்கிருந்த குருக்கள் கூறிக்கொண்டிருந்தார்.


தாத்தா, பாட்டி கிட்டத்திட்ட இறுதிவரை வாழ்ந்த ஊரிற்கு செல்வதே எனக்கெல்லாம் தனிசுகம்தான். அவர்கள் வீட்டுப்பிள்ளை என்று அடையாளப்படுத்தும்போது மகிழ்வாகவே இருக்கும். தரிசனம் முடித்துக்கொண்டு தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அளவளாவிவிட்டு புறப்பட்டோம். அந்த பயணத்தில் வரும்வழியில் சிலமுறை சென்றுள்ள திருக்கடையூருக்கும், அதுவரை செல்ல வாய்ப்பே கிடைக்காத சிதம்பரம் கோயிலுக்கும் சென்றுவரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கேயே மாலை நான்கு மணியாகியபடியாலும், இரவு எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்ற காரணத்தாலும் ஆலய தரிசனத்திற்காக வழியில் எங்கும் நிறுத்தாமல் சென்னை நோக்கி செல்வது என்று முடிவு செய்யப்பட்டு கிளம்பினோம். சிதம்பரம், சீர்காழி எல்லாம் மற்றொரு வாய்ப்பிற்காக தள்ளிவைக்கப்ட்டது. வழியில் பண்ருட்டி அருகே உணவினை முடித்துக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை சென்றடைந்தோம்.

பல ஆண்டு கனவான குலதெய்வ தரிசனமும், மேலும் பல கோயில்களும் கண்டதில் மனம் நிறைவாக இருந்தது. குடும்பத்தினர் பலரும் சேர்ந்துவந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்றும் மனதில் அசைப்போட்டுக்கொண்டேயிருக்ககூடிய பயணமாய் இது அமைந்தது.

No comments: