Friday, March 27, 2009

குடகு மலைப்பயணம் - 1அ

குடகு- இந்த பெயரை எப்போது கேட்டாலும் என் மனதினுள் ஒருவித ஆனந்தம் குடிகொண்டுவிடும். சென்னையில் இருக்கும்போதே இந்த மலை பிரதேசத்திற்கு சென்று வரவேண்டும் என்ற அவா இருந்தபோதும் அது முடியாமல்போனது. ஆராய்ச்சி படிப்பிற்காக பெங்களூரு சென்ற போதும் முதல் 4 ஆண்டுகளில் அது சாத்தியப்படவில்லை. கனவாகவே குடகு மலைப்பயணம் இருந்து கொண்டிருந்தது. எனது மூத்த நண்பர் தன் மூன்று நண்பர்களுடன் குடகிற்கு செல்லுவதற்கு முன்பு என்னிடம் சொல்லி வெறுப்பேற்றிவிட்டு சென்றார். நாம் எப்போது அங்கே செல்வோம் என்று தவித்துகொண்டிருந்தபோது அருமையான வாய்ப்பு கிடைத்து.

என் நண்பனின் பெற்றோர் பெங்களூர் வருவதாக ஏற்பாடாகி இருந்தது. அவர்களை அழைத்துகொண்டு எங்காவது செல்ல என்னை நண்பன் ஆலோசனை கேட்டபோது, குடகுதான் என் மனதில் முன்னிலையில் இருந்தது. அவனுக்கும் அதில் உடன்பாடு இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை கவனித்தோம். எங்கள் நண்பர்களையும் ஒன்றுசேர்த்து சுமார் பதினைந்து நபர்கள் செல்வது என முடிவானது. எல்லோரும் போல விடுதியில் தங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஏற்கனவே சென்று வந்த மூத்த நண்பர் ஹனிவேலி பன்னைத்தோட்டம் (Honeyvalley estate) என்னும் homestay-வில் தங்கியதாகவும், எந்தவிதமான சத்தங்களும், இடையூறுகளுமின்றி அமைதியான, அருமையான இடமாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் இருந்ததாக கூறியிருந்தார். அத்தகைய அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நாங்களும் அங்கே தங்க ஏற்பாடுகள் செய்தோம்.

ஆவலாய் எதிர்பார்திருந்த அந்த நாளும் வந்தது. நாங்கள் செல்லும் கூடுஉந்து வந்துசேர, இரவு பதினோறு மணியளவில் குடகு நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது. விராச்பெட் என்ற இடத்தை காலை 5.45 மணியளவில் சென்றடைந்தோம். நாங்கள் சென்றதோ சூன் மாதம், அங்கு மழைக்காலம். அந்த காலைவேலையிலும் மலைப்பிரதேசத்தின் அழகு மனதை கொள்ளை கொண்டது. அது நாங்கள் அடுத்த இரண்டு தினங்கள் கண்டு அனுபவிக்கப்போகும் அழகின் ஒரு வெள்ளோட்டமென உணர்த்தியது. அங்கிருந்து அலைபேசியில் அந்த இடத்தின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டபோது நாங்கள் வரவேண்டிய இடத்தை கூறினார்கள். நாங்களும் அந்த இடத்தை (கபினக்காடு) சென்றடைய, உரிமையாளர் தனது 2 பொதியுந்துகளுடன் காத்துகொண்டிருந்தார்.

நாங்கள் தங்கும் இடத்திற்கு கபினக்காடிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர்கள் மலைமீது செல்லவேண்டும்.அந்த பாதை அழகாக தார் பூசி போடப்பட்ட பாதை அல்ல; மாறாக பொதியுந்துகள் சென்று வந்ததால் ஏற்பட்ட ஒன்றாகும். ஆகையால் நல்ல மலைபயண அனுபவத்தை அது கொடுக்களாயிற்று. பல இடங்களில் செங்குத்தாகவும், மேடும்-பள்ளமுமாகவும், கல்-மணல் மற்றும் நிறைய வளைவுகள் கொண்டதாகவும் பாதை இருந்தது. இயந்திர உலகை விட்டு ஒரு தனி உலகிற்குள் செல்கின்ற உணர்வை முதல் பயணமே அளித்தது. இறுதியாக நாங்கள் தங்கும் இடத்தை வந்தடைந்தோம்.
(படத்தில் தெரிவது எங்கள் பின்னல் வந்தகொண்டிருந்த இரண்டாவது ஊர்தி)

நாங்கள் ஒரு குழுவாக வந்ததால் எங்களுக்கு ஒரு தனி வீட்டினையே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மலையின் மேலே காபித்தோட்டத்தின் நடுவே அந்த இடம் இருந்தது. மழை பெய்துமுடித்து சிறிது இடைவெளி விட்டிருந்ததால், அந்த மண்வாசமும், காபி தோட்டத்துவாசமும் சேர்த்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கியது. இந்த இடத்தை அடைந்தவுடன் நாம் எப்போது இங்கிருந்து செல்வோம் என்று பயத்துடன் நண்பனின் தாயார் கேட்டதாக பின்னர் அறிந்தேன்.




முதல் வேலையாக எங்களுக்கு வந்த அந்த காபியை மிகுந்த எதிர்பார்போடு அனைவருக்கும் பறிமாறி குடித்தோம். அந்த சுவையுடன் ஒரு காப்பியை அப்போதுதான் முதன்முதலாக குடித்தேன். மிகவும் கசப்பான காபி. கசப்பு என்பதைவிட ஒரு விதமான சுவையில் அது இருந்தது. நகரங்களில் கிடைப்பது போன்று பதப்படுத்தியதல்ல; மாறாக அவர்கள் தோட்டத்திலிருந்தே விளைவித்து அளித்தது. ஆகையாலேயே அந்த வித்தியாசமான சுவை கொண்டதாக இருந்தது. முதலில் வித்தியாசமாக இருந்தாலும் காபி பிரியர்களான நாங்கள் சிலர் அதனை அதிக ஆர்வத்துடன் பின்னர் பருக ஆரம்பித்துவிட்டோம். எல்லோரும் தயாராகி காலை உணவு உண்ண சென்றபோதுதான் கலைகட்ட ஆரம்பித்தது எங்கள் மகிழ்ச்சி. குடகு முறை உணவு வகைகளுடன் மலை தேன், பழங்கள் என்று கொண்டுவந்து வைக்க, நண்பர்கள் ஒரு பிடிபிடித்தனர். நல்ல சுவையான சிற்றுண்டிக்கு பின்னர் எங்கள் பயணதிட்டத்தின்படி பாகமண்டலாவிற்கும், தலைகாவேரிக்கும் பயணமானோம்.

Sunday, March 22, 2009

நினைத்தாலே இனிக்கும்

எனக்கு முகவரி அளித்தவரின் பிறந்த மண் நோக்கி ஒரு புகைப்பட பயணம்...


காலை வேலையில் ஓடும் இரயிலில் இருந்து புகைப்படம் எடுக்க தூண்டிய பசுமையான வயல்வெளி




ஊரின் பெயர் சொல்லும் பள்ளி




நினைத்தவுடன் மகிழ்ச்சியை அளிக்கும் வாழ்ந்த வீடு




ஊரில் இருக்கும் போதெல்லாம் செல்ல விரும்பும் ஆலயம்




கரையோரம் மிதிவண்டியில் சென்ற நினைவுகள் - தரங்கம்பாடி
( நாகை மாவட்டம்)




ஆராய்ந்து பார்க்க வேண்டும் இந்த சுவர்களின் வரலாற்றை...



சிதலமடைந்த மாசிலாமணிநாதர் திருக்கோயில்




நெதர்லாந்து நாட்டினர் ஆட்சி செய்த கோட்டை




அகழ்வைப்பகம் - தரங்கம்பாடி


முரண்பாடு - தரங்கம்பாடி


அனுபவம்

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு தனிமை வாய்தது. ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் யாரவது உடன் வர வெளியில் செல்வது வழக்கம். இந்த வாரம் எல்லோரும் பாரிஸ் மாநகர் சென்று விட்டதால் நான் தனியே செல்ல வேண்டிய சூழல். தனியாக சென்றே நீண்ட நாட்களாகிவிட்டது. நண்பர்களுடன் பொழுதினை கழித்திடவே பிடிக்கும். ஆனால் எப்போதும் நமது எண்ண அலைகளுடன் ஒத்து வரகூடியவர்கள் அமைவது கடினம். அவ்வாறான நேரங்களில் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பது நல்லது என நினைப்பவன். இந்த இடத்திற்கு வந்த பிறகு சிறிது தனிமை எனக்கு தேவைபட்டது. அதோடு, சில நாட்களாக எனக்குள் ஏனோ ஒரு பயமும் குடிகொண்டது. நம்மால் மற்றவர் துணையின்றி எங்கும் செல்லவே முடியாதோ என்ற எண்ணம்தான். ஏனெனில், ஒவ்வொரு வாரமும் செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் மற்றவர்களிடம் செல்லும் நேரத்தையும் இடத்தையும் நானே சென்று ஆலோசித்து முடிவு செய்து வந்தேன். இதனை எனது முன்னிலைத்தன்மை என்று சொல்வதா இல்லை அனைவரையும் சேர்த்து அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்று சொல்வதா இல்லை தனியே செல்ல பயம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது.

இந்த ஊர் வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் கடைத்தெரு சென்று வருவது தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்லவில்லை. ஒரு முறை இங்குள்ள கெர் ஏரி பார்க்க நண்பர்கள் சென்ற போதும் கடைசி நிமிடத்தில் என்னால் செல்ல முடியாமல் போயிய்று. ஆகையால் இந்த வாரம் அங்கு செல்ல தீர்மானித்திருந்தேன்.

எப்போதும் போல மதிய உணவை முடித்துகொண்டு கிளம்பினேன். இரண்டு பேருந்துகள் மாறி நான் செல்ல விரும்பிய இடத்திற்கும் சென்றடைந்தேன். ஏரிக்கு செல்லுமுன் ஒரு ஓடையை காண நேரிட்டது. அதன் கரையோரம் ஒரு சில மக்களை காண முடிந்தது. முதியவர்களும் இளையவரும் தங்கள் மதிய பொழுதை கரையோரம் கழித்து கொண்டிருந்தனர். சில அழகான வண்ணங்களில் ஒருசில வாத்துக்களை கண்டபோது எனது புகைப்படக்கருவிக்கு வேலை குடுக்க நினைத்தேன். மிக அழகாக இருந்த அந்த பறவைகள் எனது கண்களை கொள்ளை கொண்டன. எப்போதும் தானியங்கி முறையிலேயே படம் எடுத்து வந்ததால், இம்முறை கருவியின் பிற வசதிகளை உபயோகப்படுத்தி எடுக்க முயற்சித்தேன். இந்த முயற்சியில் சிறு வெற்றியும் கிட்டிய உணர்வு இறுதியில் ஏற்பட்டது.



அதன் வழியாகவே ஏரியை அடைந்தபோது அங்கும் இங்குமாய் மக்களை காணமுடிந்தது. அது அவ்வளவு பெரிய ஏரியாக தெரியவில்லை என்றபோதிலும் எனக்கு அழகாக தெரிந்தது. சிறு சிறு படகுகளில் மக்கள் இருகரைகளுக்கும் இடையே சென்று வந்துகொண்டிருந்தனர். ஒருசிலர் இதை ஒரு போட்டி போன்று விளையாடிகொண்டிருந்தனர். இவர்களை வழிநடத்துவதுபோல ஒரு இயந்தரப்படகில் ஒருவர் அவர்கள் பின்னே செல்வதும் வருவதுமாய் இருந்தார். அதில் என்னை கவர்ந்தது என்னவென்றால் அதில் இரண்டு குழந்தைகளும் அமர்ந்துகொண்டு அவர் ஒலிமாட்றியில் ஏதோ சொல்லும்போதெல்லாம், இவர்களும் ஏதோ சொல்லிகொண்டே வந்தனர். அந்த குழந்தைகளின் செயலே அவர்களை உற்றுநோக்க வைத்தது. நேரம் செல்ல செல்ல மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இளைய பெற்றோர் தம் குழந்தைகளுடனும், முதியோர் தத்தம் துணையுடனும், வேறு சிலர் தம் வளர்ப்பு நாய்களுடனும் தங்கள் நேரத்தை செலவழிக்களாயினர். நானும் கரையோரம் நடக்க ஆரம்பித்தேன். பல கோணங்களில் புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தேன்.



அந்த வேலையில் மனதினுள் ஒருவித மகிழ்ச்சி நிலைகொள்ள ஆரம்பித்தது. இவர்களை எல்லாம் கண்டபோது நாம் எவ்வளவு விஷயங்களை கண்டுகொள்ளாமல் செல்கிறோம் என்று புரிந்தது. பிறகு பார்த்துக் கொள்ளளாம் என்று இவ்வாறான சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் ஒத்திப்போட்டுக்கொண்டு அந்த மகிழ்ச்சியை இழந்து வருவதை என்னால் உணர முடிந்தது. நின்று ரசிக்ககூட முடியாமல் எதையோ நோக்கி ஓடிகொண்டிருக்கின்ற ஒரு குற்றவுணர்வு எனக்குள் எப்போதும் உண்டு. இந்த ஏரிகரை அளித்த மகிழ்ச்சி நான் செய்து வந்த தவறை சுட்டிக்காட்டியது. எனக்கு பிடித்தவாறு புகைப்படமும் எடுக்க முடிந்தது. ஒருசிலரோடு செல்லும்போது மட்டுமே நினைத்ததை படம் பிடிக்க முடியும்; பெரும்பாலான நேரங்களில் மற்றவர் ஏதாவது சொல்ல எனக்கு பிடித்த பல விஷயங்களை பதிவு செய்யாமல் வந்துவிட நேர்ந்துவிடும். இங்கே எனக்கு பிடித்தவற்றை பதிவு செய்து வந்தேன். இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் நாம் இருப்பது போன்று படம் எடுப்பது கடினம்; இதற்கும் ஒரு வழிகிடைத்தது போல எனது ஆய்வறை நண்பன் தனது நண்பர்களோடு வர, நான் அங்கே தனியே வந்துள்ளதை ஆச்சிரியத்துடன் பார்த்து என்னையும் புகைப்படம் எடுத்து கொடுத்தான். மேலும் சிறிது நேரம் அங்கே இருந்து அந்த பொழுதினை அனுபவித்துவிட்டு ஆனந்தத்துடன் கிளம்பினேன். எனக்குள் எதையோ மீட்டெடுத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல நாட்களாக தொலைத்த ஒன்றை திரும்ப பெற்றது போன்று உணர்ந்தேன். ஒரே நோக்கிலோ இல்லை சலிப்பூட்டுகின்ற விதத்திலோ சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை மாற்றி மனதினுள் மகிழ்ச்சியை உணர இந்த மதியவேலை வழிசெய்தது. அதோடுகூட கணிணியும், இணையமும் இல்லையெனில் வாழ்வையே தொலைத்தது போன்ற உணர்வும் பல நாட்களாய் இருக்கின்றது. காலை முதல் இரவு வரை கணிணியிலேயே பொழுது போக்கி கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் இதை தவிர்பதற்காகவே மென்பொருள்துறை பக்கம் செல்லாமல் இருந்தேன். இப்போதோ!!!! அதிலிருந்து விடுபடவும் இந்த மதியவேலை பயணம் உதவியது.வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது.

Saturday, March 14, 2009

முதல் முயற்சி

வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற அவா வெகுநாட்களாக இருந்தது; எனினும் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்று சரியாக தெரியவும் இல்லை, அதற்கான முழுமையான முயற்சியையும் செய்யவில்லை. எனது நண்பன் வீட்டிற்கு சென்றபோது நான் அவனிடம் கேட்க உடனடியாக இந்த வலைப்பதிவை ஆரம்பித்துகொடுத்தான். அட இவ்வளவு எளிமையாக உள்ளதே என்று அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து தமிழில் எழுத விருப்பப்பட்டதால் அதற்கும் அவனது உதவி கிடைத்தது. நண்பன் கையேடு இரஞ்சித்திற்கு (http://kaiyedu.blogspot.com) நன்றிகள்.

இங்கே எனது ஒருசில பயண அனுபவங்களையும், என்னை பாதித்த, பாதிக்கின்ற விஷயங்களையும், நான் இரசித்த புகைப்படங்களையும், எனது எண்ணங்களையும் பதியவைக்க முயற்சிக்கின்றேன். பள்ளியில் சிலவற்றை கவிதை என்ற பெயரில் கிறுக்கியதுண்டு. வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னால் ஏதேனும் நல்லமுறையில் இப்போது எழுத முடிகிறதா என்பதை கண்டறிய எழுத ஆரம்பிக்கின்றேன்.