Friday, July 17, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - இ

(பகுதி அ)
(பகுதி ஆ)

மறுநாள் மலைமீது விடியல் கண்டோம். நான் நன்றாக உறங்கியிருந்தேன். என் நண்பரிடம் விசாரித்தபோது அவர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர் கசிந்துகொண்டே இருந்ததால் சரியான உறக்கம் இல்லையென்றும் நானெல்லாம் நன்றாக குறட்டைவிட்டு உறங்கியதாகவும் புலம்பினார். என்ன செய்வது??எதுவும் நான் மனமுவந்து செய்த தவறல்ல.;)


நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்தால் இரண்டு மலை சிகரங்கள் பனிபடர்ந்து காட்சியளித்தன. ஒன்றினை கண்டபோது நந்தியை போன்ற உருவம் கொண்டதாக கண்ணில்பட்டது. இரண்டாம் சிகரத்தை தாண்டினால்தான் கேதார்தல் ஏரி வரும் என்றார் நண்பர். சிறிது நேரம் காலைபொழுதினை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவது என்று முடிவு செய்தோம். நாங்கள் தங்கிய இடத்திலேயே எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு பாரமின்றி செல்வது என்று பேசிக்கொண்டோம். முதல் நாள் கண்ட பெரிய நிலச்சரிவு ஒருசிலரை கலங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் இருவருக்கு முதல்நாள் சிறிது உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்காததால், மூவர் தொடர்ந்து வரவில்லை என்றும் வேண்டுமெனில் மற்றவர்கள் சென்று வரவும் என்றும் கூறினர். எங்கள் நால்வரில் என்னுள்ளும் சிறிது பயம் இருந்தது உண்மையே. ஆனாலும் ஆசை. இருவர் சென்றுவருவோம் என்று கூற நாங்கள் நான்கு பேர் பயணத்தை தொடர்ந்தோம்.

நாங்கள் எதிர்கொண்ட நிலச்சரிவு சுமார் இருநூறு அடியாவது இருந்திருக்கும். ஓரளவு அனுபவமுள்ள நண்பர் முதலில் வழிகாட்டி செல்ல, அவரை தொடர்ந்து நாங்கள் செல்வது என்று எண்ணினோம். முதலாமவர் சிறிது சென்றதை பார்த்தபோதே என்னுள் பயம் அதிகமாகியது. ஏனெனில், இரண்டு அடி முன்னே கால்களை வைப்பதற்குள், கீழ்நோக்கி சுமார் நான்கு அடிகள் சரிந்து போய்கொண்டிருந்தார். முழுவதும் கீழே போய் பின்னர் மேலே ஏறி வருவது என்பது அந்த இடத்தில் இயலாத காரியம். மிகவும் தடுமாறி தடுமாறி முன்னே செல்ல முயன்று கொண்டிருந்தார். அந்த இடத்தை தாண்டி நோக்கினாலும் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக கண்ணில் தென்பட்டன. அந்த நொடியில் மனதினுள் பயம் சூழ்ந்துக்கொண்டது. கண்டிப்பாக தாண்டி செல்ல வேண்டுமா என்று நானும் கேட்டுவிட்டேன். அவர்கள் சிறிது முயன்று பார்க்கலாமே என்று கூற இறுதியில் இரண்டு பேர்மட்டுமே செல்வது என்ற நிலையானது. அதுவும் எளிதாக இல்லை. அந்த சூழலில் அவர்களும் எங்களுக்காக மேற்கொண்டு செல்லும் எண்ணத்தை கைவிட்டனர். அவர்களுக்கு சிறிது வருத்தம்தான். ஒருவிதத்தில் எல்லோருக்கும்; ஏனெனில், எங்களின் குறிக்கோள் கேதார்தல். அதனை அடைய அதே வழியில் மேலும் சிறிது தூரம் செல்லவேண்டும். அதனை அடைய முடியாது, ஒருவகையில் பார்த்தால் எங்களின் பயணம் தோல்வியில் முடிகின்றது. மறுபடியும் வரவேண்டும் என்று இருவரும் கூறிக்கொண்டிருந்தனர். அந்த நொடியில் மறுபடியும் வருவது பற்றி எனக்குள் மிகுந்த யோசனை (சந்தேகம் என்றே சொல்லலாம்) இருந்தது. அந்த இடத்தில் மட்டும் நதிக்கரையில் கைநினைக்க சிறிது வழி இருந்தது. ஆகையால் சிறிது நேரம் நதிக்கரையில் செலவிட்டோம். நதியின் மறுபக்கம் பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவுதான் காட்சி தந்தது. அந்த திசையில் எவ்வாறு மேலே ஏறுவது என்றே வழி புலப்படவில்லை. வழிசொல்லாத மலைகளாக இருந்தன.



நேரம் சென்றுகொண்டே இருந்தபடியால் திரும்பிவருவதற்கு தயாரானோம். வந்த வழியிலேயேதான் செல்லவேண்டும்; வேறு வழியில்லை. முதல்நாள் கடந்துவந்த பாதையை நினைத்தபோது மனதினுள் சிறிது பயம் ஏற்பட்டது என்பது உண்மை. எனினும், முதல்நாள் எப்படி வந்தோமோ அப்படியே சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. இருந்த இடத்திலிருந்து காட்சியளித்த மலை சிகரங்களை இறுதியாக மனதினுள் உருவமாக பதித்துக்கொண்டும், புகைப்படங்களாய் கைப்பற்றிக்கொண்டும் வந்தவழியிலேயே நடையினை தொடர்ந்தோம். அந்த இடம் சிறிது நேரத்தில் மேகமூட்டமாகியது. நல்ல நேரமாக மழை வரவில்லை.


வந்த வழியிலேயே நடந்ததால் அன்றைய நடையில் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. கால்கள் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பனி படர்ந்த சரிவினை அடைந்தோம். முதல்நாள் அளவிற்கு சிரமம் இல்லை; எனினும் சிறிது நேரம் எடுத்தது என்னவோ உண்மைதான். சில இடங்கள் தொடக்கபுள்ளிக்கு அருகில் வந்துவிட்டது போன்று தோன்றும்; ஆனால் அதிலிருந்து மேலும் அதிக தூரம் நடக்க வேண்டியதாயிருக்கும். எல்லாம் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே நாளில் பாதையில் பார்த்த பல விடயங்கள் மறந்துபோயிருந்தன. முதல் நாள் தொடக்கத்தில் தடுமாறிய சிறுகுன்று வந்தபோது அதற்குமேல் எவ்வாறு செல்வது என்று புரியவில்லை. பலருக்கும் எப்படி வந்தோம் என்று நினைவில்லில்லை. சிறிது யூகத்தின் அடிப்படையில் வழியினை தொடர்ந்து மனிதநடமாட்டம் உள்ள இடத்தினை வந்தடைந்தோம்.


எங்கள் அறையில் சிறிது இளைப்பாறிவிட்டு, கங்கோத்திரி ஆலயம் சென்று வழிபட்டோம். இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாததால் இரவு உணவினை சீக்கிரமே முடித்துக்கொண்டோம். மறுநாள் ரிசிகேசம் வந்துசேர பொதியுந்துவை ஏற்பாடு செய்துவிட்டு, கடைத்தெருவில் சிறிது சுற்றிவிட்டு தங்கும் அறை வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை மீண்டும் பொதியுந்து பயணம். வழியில் சில இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் சில மண்சரிவுகளையும் வழியில் கண்டோம். ரிசிகேசம் வந்துசேர மாலை ஏழு மணியாகிவிட்டது. எங்கள் திட்டப்படி நாங்கள் நால்வர் மறுநாள் காலை புதுதில்லி புறப்படுவது என்றும், மற்ற மூவர் வேறு இடங்களுக்கு தங்கள் பயணத்தை தொடர்வது என்றும் முடிவாகியிருந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?? எங்களுக்கு பெங்களூரு செல்ல இரயிலில் முன்பதிவு (டட்கால்) செய்ய நண்பனின் நண்பனிடம் சொல்லியிருந்தோம். அவனோ அலைபேசியில் அழைத்து முன்பதிவு கிடைக்கவில்லை என்று கூறி பீதியை கிளப்பிவிட்டான். அதன் காரணமாக அன்றிரவே பேருந்துபிடித்து அதிகாலை மூன்று மணியளவில் தில்லி இரயில் நிலையம் வந்து, காலை ஏழு மணியளாவில் புறப்படும் இரயிலில் முன்பதிவு செய்யாதோர் பெட்டியில் முண்டியடித்து இடம்பிடித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்கள் பயணதிட்டத்தை ஒருநாள் முன்னராக மாற்றியதால் முன்பதிவு செய்து வைத்திருந்த பயணசீட்டை கிளம்பும்முன்னர் ரத்து செய்து விட்டோம். நல்ல வேளையாக, அதிக சிரமமில்லாமல் இரண்டு நாள் பயணத்தை அந்த பெட்டியில் முடித்து பெங்களூரில் கால் வைத்தபோது மனதினுள் எதையோ சாதித்த உணர்வு குடிகொண்டது.

எங்களின் உண்மையான இலக்கினை அடையமுடியவில்லை. எனினும், இமயத்தை காணவேண்டும் என்ற ஆவல் பூர்த்தியானது. பூர்த்தியானது என்பதைவிட மேலும் சென்று கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது என்றே கூறவேண்டும். மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்லவேண்டும். அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றேன். என் மனதில் என்றும் நீங்காத இடத்தை இந்த பயணமும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

3 comments:

சந்தனமுல்லை said...

ஆகா....அதற்குள் மூன்றாவது பயணக்குறிப்பா...இப்போதுதான் முதல் பயணக்குறிப்பை படித்தாற்போல் இருந்தது! :-) படங்கள் அருமை! இமயத்தைத் தொட்டுவிட்டீர்கள்...வாழ்த்துகள்!

//சிறிது யூகத்தின் அடிப்படையில் வழியினை தொடர்ந்து மனிதநடமாட்டம் உள்ள இடத்தினை வந்தடைந்தோம்.//

விறுவிறுப்பாக இருந்தது!

கையேடு said...

மணி அடுத்த பயணக் கட்டுரை எப்போது??

எப்படியோ இமயத்தில் கால்தடத்தை பதித்தாயிற்று வாழ்த்துக்கள்..

மணிநரேன் said...

நன்றி முல்லை. உண்மையிலேயே மிகவும் பரபரப்பூட்டுகிற விதத்தில்தான் பயணம் அமைந்தது.

நன்றி இரஞ்சித்.