Wednesday, October 7, 2009

அடப்போங்க மக்கா....

காட்சி 1

எங்காளு ஐம்பத்தைந்து சதவிகிதம்தான் எடுத்திருக்கான், என்றேன்.

இரண்டாம் ஆண்டு மதிப்பெண்களா? என்றார் அவர்.

ஆமாம்.

அடப்போடா! கல்லூரி வந்தாச்சு. சும்மா மதிப்பெண் வாங்கலைனு இன்னமும் அவனை போட்டு இம்சை பண்ணாதீங்கடா. இப்ப இது ஓக்கே. எல்லாம் வாங்கிடுவான். அவனை நிம்மதியா விடுங்கடா.

எனக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.


காட்சி 2

என்ன தம்பி, பரிட்சை மதிப்பெண்கள் வந்துடுச்சா? என்றார் தன் பிள்ளையிடம்.

இன்னைக்குதான் கொடுத்தார்கள்; இந்தாங்க விடைத்தாள்கள்.

பார்த்த நொடியில் அவருக்குள் கோபம்பொங்கி அவனை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சி. அந்த பிள்ளை மிகவும் நன்றாக படிப்பவன். எதுக்குடா அவங்க இப்படி திட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவனது விடைத்தாள்களை வாங்கி பார்த்தபோது அவனது மதிப்பெண்கள் அறிவியலில் தொண்ணூற்றி ஐந்து என்று இருந்தது.

அடிப்பாவி பெண்ணே என்று மனதில் நினைத்துக்கொண்டு, இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கான், எதுக்கு அவனை திட்டிக்கிட்டிருக்கீங்க?

ஐந்து மதிப்பெண்களை கோட்டை விட்டுட்டு வந்துள்ளான். இவன் வகுப்பு தோழிகளெல்லாம் இவனைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். இவன் பாரு என்ன பண்ணியிருக்கானு. இப்பவே இப்படினா போக போக படிப்பிலே நாட்டமே போய் பத்தாவதுலே நல்ல மதிப்பெண்கள் வாங்க மாட்டான் என்றும் உருப்பிட மாட்டான் என்றும் ஒரே புலம்பல். அவன் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் நியாயமாக யோசிக்க சொல்லி பார்த்தேன். பயன் இல்லை. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்க வேண்டும் போல இருந்தது. என்னைவிடவும் வயதில் பெரியவர்கள்; ஆகையால் அவ்வாறு கேட்க முடியவில்லை. சில பெற்றோர்கள் சிறிதும் யோசிக்கமாட்டார்கள் என்று நன்றாக புரிந்தது. அந்த பிள்ளையின் நிலை கண்டு வருத்தப்பட்டுக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

மனதில் அவர்கள் என்னிடம் முன்னர் கூறிய சொற்கள் வந்துபோனது. கல்லூரி ஐம்பத்தைந்தை விட ஏழாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வின் தொண்ணூற்றி ஐந்து குறைவான மதிப்பெண் என்று எனக்கு அதுவரை தெரியாமல் போயிற்று. அடப்போங்க மக்கா....


பி.கு: பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும்,பொதுநல நோக்கும் இருக்கும் சில மக்களிடமும் ஒரு சிறு அளவாவது தன்னலம் இருக்கின்றதோ என்று யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இந்த வரிசையில் பதிய முயல்கிறேன்.


5 comments:

கையேடு said...

:))

பழமைபேசி said...

ஆமாங்க...

மணிநரேன் said...

தங்கள் கருத்திற்கு நன்றி இரஞ்சித் & பழமைபேசி.

சந்தனமுல்லை said...

/கல்லூரி ஐம்பத்தைந்தை விட ஏழாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வின் தொண்ணூற்றி ஐந்து குறைவான மதிப்பெண்/

ஆகா!!

மணிநரேன் said...

ஆமாம் சந்தனமுல்லை.