Thursday, October 29, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஆ

கொலோன் நகரிலிருந்து போன் நகரையடுத்த பேட்ஹானாப் என்னும் இடத்திலுள்ள நண்பனை காண சென்றேன். அந்த நகரை சுற்றிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பிப்போனோம். அந்த ஊரின் வழியே ரைன் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. நதியின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவே பாலம் எதுவும் கண்ணில்படவில்லை. மாறாக படகுகளையே மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மக்கள் பெரும்பாலும் மகிழுந்து வைத்துள்ளனர். கரை தாண்டி செல்ல விரும்புவோர் தங்கள் மகிழுந்துகளை எப்படி எடுத்து செல்வார்கள் என்று யோசிக்கும்போதுதான் அந்த படகின் தன்மை புரிந்தது. வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனத்தினூடேயே படகுகளில் சவாரி செய்கின்றனர். படகு ரொம்ப பெரிசுதான். பாலம் கட்டி பணத்தை செலவுசெய்யாமல் ஒருவித வருமானமாக இதனை பார்க்கிறார்களோ என்று தோன்றியது.



கரையையொட்டியே நடந்துகொண்டிருந்தோம். மறுகரையிலிருந்தே ஒரு பாழடைந்த கோட்டைசுவற்றை கண்டிருந்ததால் அதனை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அதற்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க சிறிது சிரமப்படவேண்டியிருந்தது.ஒருவழியாக அது அமைந்திருந்த சிறுகுன்றின் அடிவாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.


அங்கிருந்து பார்த்தபோது அது ஏதோ ஒரு தோட்டத்திற்குள் செல்வதுபோல இருந்தது. எனினும் வேலிகள் எதுவும் இல்லை.அந்த இடத்தில் எந்தவொரு சரியான அறிவிப்பு பலகையோ அல்லது கேட்டுச்செல்ல மனிதர்களோ இல்லை. தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் சிறிது நேரம். பின்னர் போய்தான் பார்ப்போமே என்று அந்த பாதைவழி ஏற ஆரம்பித்தோம். அருகில் சென்றபோதுதான் அங்கே இருபுறமும் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது என்பதை கண்டோம்; அது ஒரு வைன்யார்ட் என்று புரிந்தது.





ஓரளவு தூரம் சென்றதும் ஒரு பாதை காட்டுக்குள் செல்வதாக விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அந்த பாதையை தவிர்த்து மற்ற பாதையில் சிறிதுதூரம் சென்றோம். கோட்டைக்கு செல்லும் வழி சரியாக புலப்படவில்லை. ஆகையால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் செல்லாமல் நின்றுவிட்டோம். அங்கிருந்து கண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. சிறிது நேரம் அங்கிருந்து அந்த காட்சிகளை கண்டுரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அடிவாரம் நோக்கி திரும்பிவிட்டோம்.



அடுத்த நாள் போன் நகரை சுற்றிப்பார்க்க சென்றோம். முதலில் சென்றது இசைமேதை பீத்தோவனின் இல்லம். அவர் பிறந்து வளர்ந்த வீட்டை அருங்காட்சியகமாக பராமரித்து வருகின்றனர். அவர் வாழ்க்கை வரலாற்றை அங்கே பார்த்தபோது மிகவும் மகிழ்வாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ?அவரது இசையை அங்கே கேட்கும் வாய்ப்பும் அமைந்தது. ஒலி ஒளி காட்சிகளாக குறிப்பிட்ட நேரங்களில் அங்கேயே உள்ள ஒரு காட்சியரங்கில் திரையிடுகிறார்கள். முதல்முறையாக அவரது இசையை கேட்டேன். எனினும் என்னை அதனுள் இழுத்துக்கொண்டது என்றால் மிகையாகாது.அவர் இயற்றியிருந்த இசைதொகுதியொன்றிற்கு லேசர் மூலம் ஒளி வடிவம் கொடுத்து நன்றாக செய்திருந்தனர். நான் ரசித்து அமர்ந்திருந்த அந்த இருபது நிமிடங்கள் என்னை எங்கோ இழுத்துச்சென்றது எனலாம்.இசை செய்யும் மாயங்களே கணக்கிட முடியாதது.



உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் அங்கே சென்றுவந்ததை பறைசாற்றும் வகையில் அந்த இல்லத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.




அதன் பின்னர் அந்த நகரில் ஒரு பூங்காவை மட்டும் சுற்றிவிட்டு பல மலர்களை ரசித்துவிட்டு மனை வந்து சேர்ந்தோம். மறுநாள் மறுபடி சூளிச் பயணம்.

5 comments:

பதி said...

மணி,

அருமை. சென்ற வருடம் அங்கு சுற்றியது நினைவுக்கு வருகின்றது !!!!

மணிநரேன் said...

"ஆட்டோகிராப்" பாட்டு பாடினியா பதி..;)

விக்னேஷ்வரி said...

அழகான புகைப்படங்களுடன் அருமையான பயணக் கட்டுரை.

பதி said...

சே சே..
அதுக்கு நான் என்ன மணியா???

எனக்குனே ஒரு பாட்டு இருக்கு மணி,

"எங்கேயும் எப்போதும் சந்தோசம் சங்கீதம்" !!!!
http://www.youtube.com/watch?v=9RjgxnK50oA

மணிநரேன் said...

நன்றி விக்னேஷ்வரி.

பதி....அப்படியே இருந்துவிடு.