Wednesday, July 8, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - அ

மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்று பெருமை கொள்ளும் மக்கள் நாம். பாரதி அழகாகவும், ஆசையை தூண்டும் விதமாகவும் “வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்” என்றும் கூறினான். அவன் தீர்க்கமாக கூறிச்சென்ற பலவற்றுள் இமயத்தை கண்டு, அதன் மீது உலவி வரவேண்டும் என்ற ஆசை என்னுள் நெடுநாளாக இருந்தது. ஆசை இருந்தாலும் வழி தெரியவேண்டுமே; தகுந்த நேரம் வரவேண்டுமே! எனது நெடுநாள் காத்திருப்பு நிறைவடையும் நேரமும் வந்தது. எங்கள் அறிவியல் கழகத்திலிருந்து நண்பர்கள் சிலர் கங்கோத்திரி செல்லமுடிவெடுத்து ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். கங்கோத்திரி செல்லும் பலர் அங்கிருந்து தபோவன் – கோமுக் ஆகிய இடங்களுக்கு டிரெக்கிங் என்று சொல்லப்படும் நடைபயணம் மேற்கொள்வார்கள். கோமுக் என்பது கங்கையின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. இவர்களின் திட்டம் அந்த வழியில் செல்லாமல் அதற்கு எதிர்திசையில் உள்ள கேதார்தல் என்னும் ஏரி நோக்கி செல்வதாக இருந்தது. அதிகம் மக்கள் செல்லாத இடம் அது. ஆகையால் சிறிது பயம் என் மனதினுள் இருந்தது. இதனால் என்னால் முதலில் அவர்களுடன் செல்வது பற்றி முடிவெடுக்க முடியவில்லை. பின்னர் அவர்களுள் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக தனது பயண முடிவை மாற்றிக்கொண்டார். அவருக்காக ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு இருக்கை இருப்பதாகவும், நான் வர சம்மதமா என்றும் கேட்டனர். விதிகளின்படி மாற்றி பயணிக்க கூடாது. புதியதாக பதிவு செய்ய இருக்கைகளும் இல்லை. ஆசை....இமயத்தை பார்க்க ஆசை. கூட்டமாக செல்வதால் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையுடன் வீட்டில் சிறிது போராடி அனுமதி வாங்கி அவர்களுடன் செல்ல முடிவெடுத்து ஆயத்தமானேன்.

எங்கள் பயண திட்டத்தின்படி பெங்களூரிலிருந்து தில்லி சென்று, அங்கிருந்து ரிசிகேசம் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கோத்திரி செல்ல திட்டம். அந்த நாளும் வந்தது. நாங்கள் நடக்கபோகும் பாதையில் உணவெல்லாம் கிடைக்காது. ஆகையால் அவற்றை இங்கிருந்தே எடுத்து செல்லவேண்டிய கட்டாயம். அதிகமாக சுமையும் எடுத்துக்கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், நாங்கள் அந்த சுமைகளை சுமந்துக்கொண்டு இரண்டு நாட்கள் மலைகளில் செல்ல வேண்டும். சிறிது கடினமான பாதையாதலால் மற்றவர்களுக்கு சுமைதூக்கி உதவுவது எளிதாக இருக்காது. அவரவர் சுமந்து சென்றால்தான் இலக்கை அடைய முடியும். மேலும் மலை நடுவே ஓர் இரவு தங்கவேண்டியுள்ளதால் அதற்கு தேவையான தூங்கும் பை (sleeping bag) வாங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் வாங்கி பைகளில் எடுத்து வைப்பதே பெரிய வேலையாகிபோனது.

எல்லோரும் மகிழ்வுடன் ரயில் நிலையம் நோக்கி கிளம்பினோம். பயணம் நல்ல விதமாக துவங்கியது. மறுநாள் காலை செகந்திராபாத் இரயில் நிலையத்திற்கு எங்கள் குழுவிலிருந்த நண்பரின் குடும்பத்தினர் எங்கள் அனைவருக்கும் பயணத்திற்கான உணவு கொண்டுவந்து அளித்தனர். அருமையான உணவு. அவர்களுக்கு நன்றி கூறிகொண்டு பயணம் தொடர்ந்தது. மறுநாள் மதியம் தில்லி சென்றடைந்தோம். அங்கே இன்னொரு நண்பரின் நண்பர் வந்திருந்தார். அவரிடம் எங்கள் ரிடர்ன் (மறு பயணத்தை) மாற்றி முன்பதிவு செய்ய சொல்லிவிட்டு ரிசிகேசம் நோக்கிய பேருந்து பயணத்தை மேற்கொண்டோம்.

கங்கோத்திரி உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்களில் கார்வால் மலைத்தொடர் பகுதியில் இது அமைந்துள்ளது. ரிசிகேசத்திலிருந்து உத்திரகாசி வழியாக சுமார் 220 கி.மீ. தூரத்தில் உள்ளது. முழுதும் மலைத்தொடர்களினூடேயே பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ரிசிகேசம் சென்றடைய இரவு சுமார் பத்து மணியாகிவிட்டது. கங்கோத்திரி செல்ல பேருந்து சீட்டு மறுநாள் காலை சுமார் நான்கு மணிக்கெல்லாம் வாங்கிக்கொண்டு உடனேயே பேருந்தில் செல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். எங்களுக்கோ சிறிது அசதியாக இருந்தது. எப்படியும் உணவருந்திவிட்டு உறங்க நடுநிசி ஆகிவிடும் என்று தெரியும். ஆகையால் நாங்கள் தங்குவதற்கு அறை எடுத்த இடத்திலேயே தனியாக பொதியுந்து ஏற்பாடு செய்துகொண்டோம்.

அடுத்த நாள் காலை சுமார் 6.30 மணியளவில் கங்கோத்திரி நோக்கி புறப்பட்டோம். சுமார் பத்து நிமிடங்கள்தான் சமதரையில் பயணம். அதன் பின்னர் முழுதுமாக மலைப்பயணம்தான். ஆரம்பத்தில் பயணம் சுகமாகத்தான் இருந்தது. எனினும், மலைகளில் செல்ல செல்ல ஓரிருவர் மிகவும் சங்கடப்பட்டனர். வளைந்து வளைந்து பாதை இருந்ததால் தலைசுற்றல் மற்றும் சில உபாதைகள் அவர்களை வாட்டியது. நல்ல உடல்நிலை உள்ளவர்கள்தான்; எனினும், பயண பாதை அவர்களுக்கும் சிறிது சங்கடத்தை அளித்தது. வேறு பாதைகளும் இல்லை. அவர்கள் எப்படியோ சமாளித்துகொண்டு பயணத்தை தொடர்ந்தனர். இதில் நாங்கள் பாராட்டியது பின்புறம் பக்கவாட்டில் அமர்ந்து, முழு பயணமும் செய்த இரண்டு நண்பர்களைதான். ஏனெனில், அந்த இருக்கையை தவிர்க்க நாங்கள் ஐவர் முயன்று வென்றோம் என்றே சொல்ல வேண்டும். அங்கே அமர்ந்து பயணிக்கும் தைரியம் எங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

பயணம் தொடர்ந்தது. ஒரு பக்கம் உயர்ந்த மலைகளும், மறுபக்கம் ஆழ் பல்லத்தாக்குகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சில சிறிய ஊர்கள் வந்துசென்றன. பல காட்சிகள் இதமாக வந்துசென்றாலும், தெஹரி என்ற இடம் முதன்முதலில் மனதில் நீங்காத இடமாக குடிகொண்டது. அணை கட்டப்படும் இடம் என்று ஓரிடத்தில் எங்கள் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார்.




இரண்டு மலைகளுக்கும் நடுவே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உயரத்திலிருந்து பார்த்தபோது ஆறு பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆற்றின் ஓரத்தில் இருக்கும் பல ஊர்கள் மூழ்கிவிடும் என்று கேள்விபட்டபோது மனம் வருந்தியது. சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். பல காட்சிகளை எங்களுக்கு இயற்கை விருந்தாக்கி படைத்து கொண்டிருந்தது. மலைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக மாறி மாறி பாதை சென்றுகொண்டிருந்தது. சில நேரங்களில் கங்கை நதி சாலையின் அருகிலேயே எங்களுக்கு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது.



தராசு வழியாக உத்திரகாசி சென்றடைந்தோம். அங்கிருந்து சுமார் 100 கி.மீ. தூரம் செல்லவேண்டும். அதன் பின்னர் சென்ற பாதை மிகவும் பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும். அவ்வாறான மலை பிரதேசங்களில் மலைகளை குடைந்து சாலைகள் அமைத்து அதனை பராமரிப்பதே மிகப்பெரிய விடயம். அதனை செய்துகொண்டிருக்கும் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன் (BRO) பாராட்டப்பட வேண்டியவர்கள். பயணித்த வழியில் சில மண்சரிவுகளையும் கண்டோம்; ஒரு சில இடங்களில் சாலை வேலையும் நடந்து கொண்டிருந்தது.



என்னதான் மலைகளில் காலைமுதல் சென்றுகொண்டிருந்தாலும், இமயத்திற்கான அடையாளமான பனிபடர்ந்த மலையுச்சியின் தரிசனம் எங்களுக்கு மதியம் சுமார் மூன்றறை மணியளவில் கிடைத்தது. தூரத்திலிருந்து அந்த காட்சியை கண்டவுடன் எனது உள்ளம் ஆனந்தநடமாடியது. இதனை காணதானே இத்துனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன். அங்கே இறங்கி ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அந்த அழகை அருகில் ரசிக்க எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். மாலை சுமார் ஐந்தரை மணியளவில் கங்கோத்திரியை அடைந்தோம்.

அங்கே தங்குவதற்கு பல விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, முதல் வேலையாக கங்கையில் குளித்து வரலாமென புறப்பட்டு சென்றோம். தெளிந்த நீராக இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு காலை முதற்கொண்டே மண்னின் நிறத்திலேயே காட்சியளித்து வந்தாள். இந்த இடத்தில் எப்படியிருக்கும் என்றெண்ணிக்கொண்டு சென்றேன். இங்கும் மண்னை அடித்துகொண்டுவருவது போலவே அந்த நிறத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள்.


நிறம் எவ்வாறு இருந்தால் என்ன, கங்கையில் குளிப்பதுதான் முக்கியம் என்றெண்ணி ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தோம். ஆசையாக கால் வைத்த எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி கிடைத்தது. காரணம், அந்த நீரின் வெப்பநிலை. நாங்கள் சென்றதோ வெயில் வாட்டிஎடுக்கும் மே மாதம். காற்றில் வெப்பம் சிறிது இருந்ததால், நீரில் குளிர்ச்சி அதிகம் இருக்காது என்று நினைத்திருந்த எங்களுக்கு முதல் அதிர்ச்சியை அளித்தது கங்கை நதி. குளிர்சாதன பெட்டியிலுள்ள ஃபிரீசர் (freezer-ல்) தண்ணிர் எந்த வெப்பநிலையில் இருக்குமோ, அதற்கு ஒப்பான குளிர்ச்சியில் கங்கை ஓடிக்கொண்டிருந்தது. பனிக்கட்டி இல்லாதது மட்டுமே வித்தியாசம். எப்படி இருந்தாலும் அங்கே குளிப்பது என்று முடிவுசெய்து கொண்டோம். குளிரில் உடல் நடுநடுங்க, பற்கள் பலமாக தாளம்போட வேகவேகமாக ஆற்றில் குளித்து முடித்தோம். என்னதான் குளிரடித்தாலும் ஆற்றுநீர் குளியல் அளித்த சுகமே தனிதான். பகல் முழுதும் பயணம் செய்த அயர்ச்சி நீங்கி ஒரு புத்துணர்ச்சி பெற்றோம் என்றே சொல்லவேண்டும். இரவு நன்றாக பசியாறிவிட்டு அடுத்த நாள் ட்ரெக்கிங் பயணத்திற்கு தேவையானதை சரியாக எடுத்துவைத்துவிட்டு உறங்கபோனோம்.

5 comments:

கையேடு said...

முதல் பகுதி நன்றாக வந்துள்ளது மணி..

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

விக்னேஷ்வரி said...

புகைப்படங்கள் அழகு.

மணிநரேன் said...

நன்றி இரஞ்சித் மற்றும் விக்னேஷ்வரி.

அமுதா கிருஷ்ணா said...

நான் கேதார், பத்ரி போய் உள்ளேன்..இதே அனுபவம் தான்..இயற்கை தான் கடவுள்...

மணிநரேன் said...

நன்றி அமுதா.