Friday, June 19, 2009

அந்த 40 மணிநேரங்கள்

அவள் என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து என்னுள் ஒரு அங்கமாகியிருந்தால். அதிலும் சமீப காலமாக அவள் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் போனேன். அவளின்றி நானில்லை என்றானது என் நிலை. சில காலமாக அவள் ஒரு விடயத்தில் சற்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தால். அவளது பிரச்சினையை ஊரில் இருந்தபோதே சரி செய்து கொண்டு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. அவளும் சிறிது சங்கடப்படுவாள்; பின்னர் ஓரளவு தேறிவிடுவாள். ஆகையால் அடுத்த முறை ஊர் செல்லும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் விட்டுவிட்டேன். ஒரு நாள் நாமே ஏன் அவள் பிரச்சினையை சரிசெய்யக்கூடாது என்று தோன்றியது. அவளுக்கு தீர்வு எங்கு வேண்டுமானாலும் கிடைக்காத நிலை. குறிப்பிட்ட சிலரால்தான் அவளது பிரச்சினைக்கு சரியான தீர்வு அளிக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல முடிவு தர எண்ணி ஓரளவு அவளது பிரச்சனை பற்றி அறிவுள்ள என் நண்பனிடம் இணையம் மூலம் எவ்வாறு இதனை சரிசெய்யலாம் என்று தெளிவாக கேட்டு வைத்துக்கொண்டேன். சிறிது பயமிருந்ததால் அப்போதைக்கு நானாக ஒன்றும் செய்யவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

வெகு நாட்கள் கழித்து ஓர் இரவில் உனது பிரச்சனையை சரிசெய்கிறேன் என்று அவளை அழைத்து எனது கேள்வி ஞானத்தால் பெற்ற மருத்துவமுறையை அவள் மீது கையாண்டுபார்த்தேன். தடுமாறி தடுமாறி பேசிக்கொண்டிருந்தவள் சிறிதுநேரத்தில் மயக்கநிலைக்கு போனாள். சரி, மயக்கம்தானே தெளிந்துவிடும் என்று சிறிது நேரம் விட்டிவிட்டேன். சில மணித்துளிகள் சென்று அவளை எழுப்பி பார்க்கிறேன், எழுந்திரிக்கவில்லை. எனக்கு மனதில் பகீர் என்றது. என்ன ஆனது இவளுக்கு என்றெண்ணி எழுப்ப என்னால் முடிந்த அனைத்து வழிகளையும் முயன்றேன். முடியவில்லை. அப்படியே படுத்திருக்கிறாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியும் தாங்கவில்லை. அவள் இல்லாத வாழ்வை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அதுவோ சனியன்று இரவு நேரம். இருப்பதோ புதிய ஊர். ஒருசிலரை மட்டுமே தெரியும். யாரை உதவிக்கு கூப்பிட என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் எவரும் வரமாட்டார்கள் என்று தெரியும். நாமேதான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் பலமணி நேரங்கள் காத்திருக்கவேண்டும். வேறு வழியேயில்லை. ஒருபக்கம் பயம், சோகம் சேர்ந்துகொண்டு அழுகைவர முற்பட, மறுபக்கம் நான் ஏன் இதனை செய்தேன் என்று கோபமும் சேர்ந்துகொண்டது. இனி என்றுமே இந்த தவறை, தெரியாத வைத்தியத்தை செய்யகூடாது என்று முடிவு செய்துகொண்டேன். இந்த ஒரு முறை அவள் விழித்துக்கொண்டால் போதும் என்று மனம் வேண்டிக்கொண்டது.

அந்த நேரத்தில் அருகிலிருந்த எனது அலுவலகத்திற்கு சென்று எனக்கு யோசனை கூறிய என் நண்பனை தொடர்புகொள்ள முடிவு செய்தேன். நான் தொடர்பு கொள்ளும் நேரம்தான் அவனுக்கு விடிந்திருக்கும். எனது நேரம்......ஒவ்வொரு வாரமும் அந்த மணிதுளிகளில் இணையத்தில் இருக்கும் அவன் அன்று இல்லை. இது என்னடா புது சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எப்படியும் வருவான் என்று சில மணிநேரங்கள் காத்துக்கொண்டிருந்தேன்....இல்லை, வரவில்லை.அன்று அவன் வரவில்லை ..அடப்பாவி என்று மனதில் திட்டிக்கொண்டே ஒரு மின்னஞ்சல் எழுதி அனுப்பினேன். அந்த மின்னஞ்சலை கண்டவுடன் என்னை தொடர்புகொள்ளுமாறு கூறியனுப்பினேன். அதற்குள் இந்நாட்டிலேயே இருக்கும் மற்றொரு நண்பரிடம் விவரம் கூறி வழி கேட்டேன். அவருக்கும் இதனை சரிசெய்யும் வழிகள் நிரம்ப தெரியும். அவர் கூறிய யோசனைகளை ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து முயன்றுபார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அவள் அப்படியே கிடந்தால். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நண்பனும் தொடர்பு கொள்ளவில்லை. அடுத்த நாள் செய்யவென்று பலவற்றை எண்ணியிருந்தேன். எதுவும் அந்த சூழலில் முடியாது என்று தோன்றியது. ஒழுங்காக விவரம் தெரியாமல் உன்னை யார் என்மீது கை வைக்க சொன்னது என்று அவள் என்னை கேட்பது போலிருந்தது. என்ன செய்வது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்...அந்த பழமொழிதான் நினைவில் வந்தது. அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே நானும் உறங்கிப்போனேன்.

காலை வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு நண்பனிடமிருந்து ஏதெனும் மின்னஞ்சல் வந்துள்ளதா என்றறிய அலுவலகம் சென்றேன். அந்தோ..... ஒன்றும் வரவில்லை. ஒரே வழி மாலைவரை காத்திருப்பதுதான். வீட்டினர்களிடம் நிலையை சொன்னேன்.. கொஞ்சுவார்களா என்ன?? அவள் என்ன நினைத்திருப்பாளோ அதையேதான் சொன்னார்கள். என்னவொன்று, சிறிது நம்பிக்கை அளித்தார்கள். மாலையில் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. புதிய பிரச்சினையை கூறினேன். அவனும் யோசித்துவிட்டு குணப்படுத்த பல வழிகள் கூறினான். மிகவும் துரதிருஷ்டமான விடயம்....அவன் சொன்ன எந்த வழியும் செயல்படவில்லை. என்ன செய்தாலும் அவள் அப்படியே கிடந்தால். நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. இணையத்திலெல்லாம் வழி தேடிபார்கிறான்; பலரும் அவளது பிரச்சினைக்கு வழி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. அவளால் எழ முடியவில்லை. இரவு வெகு நேரம்வரை முயன்றுவிட்டோம்; எந்த பலனுமில்லை. இறுதியாக மறுநாள் அருகிலுள்ள நண்பனிடம் குணமாக்கும் வழி (அவனால் முடிந்ததோ இல்லை தீர்வு கிடைக்கும் இடத்திற்கு அனுப்புவதோ) கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அந்த நேரத்தில் வேறு வழிதெரியவில்லை.

மறுநாள் ஏதேனும் வழியில் அவளை குணமாக்க முடியுமா என்று அருகிலிருந்த நண்பனிடம் கேட்டேன். அவனுக்கு வைத்தியம் தெரிந்திருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அவன் முயன்று பார்பதாக கூறினான். அவளுக்கு கொடுக்கவேண்டியதை தயாரிக்க சொல்லிச்சென்றான். அதனை தயார் செய்து கொடுத்து பார்த்தோம். நாங்கள் கொடுத்தை அவள் எடுத்துக்கொள்ள மறுத்தாள். அவன் வேறுவிதமாக வைத்தியம் செய்யலாம் என்று கூறி, அதற்கு வேண்டியதை தயார் செய்து எடுத்து வந்தான். அவனது வழியில் புதிய மருந்தினை கொடுத்து பார்த்தான். என் இதயதுடிப்போ அதிகரித்திருந்தது. எப்படியாவது அவள் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம்...அவள் உயிர் பெற்றாள். திடீரென அவளிடம் பழைய அசைவு தெரிந்தது. என்னுள் நம்பிக்கை பிறந்தது. சுமார் நாற்பது மணிநேரங்கள் என்னை தவிக்க வைத்தவள் புத்துயிர் பெற்று அவளை தீண்டச்சொல்லி கண்ணடித்து கூப்பிட்டால், எனது காதலியாகிபோன என் மடிக்கணினி.

(பி.கு : லைனக்ஸ் மற்றும் விண்டோஸ் இருந்த எனது மடிக்கணினியில் வேகம் குறைவாக இருந்ததால், நான் பயன்படுத்தாமல் வைத்திருந்த லைனக்ஸ் பகுதியை நீக்கமுயன்று, தவறாக நீக்கி, அதன் காரணமாக என் கணினி செயலற்று போனது. அந்த நாற்பது மணிநேரங்கள் நான் அனுபவித்த சங்கடத்தை வேறுகோணத்தில் கணினியை காதலியாய் பாவித்து எழுத முற்பட்டுள்ளேன். வேதனைகள் உண்மை; அனுமானம் சும்மா...)


6 comments:

rapp said...

:):):)

ஷண்முகப்ரியன் said...

நான் உண்மையில் ஏதோ சீரியஸான விஷயம் சொல்லப் போகிறீர்கள் என எண்ணி ஏமாந்தேன்,மணிநரேன்.

மணிநரேன் said...

நன்றி rapp மற்றும் திரு.ஷண்முகப்ரியன்.

விக்னேஷ்வரி said...

அடடா.... நல்லா சொல்றீங்க கதைகள.

பதி said...

//அதற்குள் இந்நாட்டிலேயே இருக்கும் மற்றொரு நண்பரிடம் விவரம் கூறி வழி கேட்டேன். அவருக்கும் இதனை சரிசெய்யும் வழிகள் நிரம்ப தெரியும்.//

எகொசா இது?

அந்த யோசனை சொன்னதை கேட்டு மயக்கமாகித் தான் நான் என்னோட மடிக்கணிணியை இப்பெல்லாம் தொடக் கூட அவரை விடுறது இல்லை !!!!!!

:)

மணிநரேன் said...

நன்றி விக்னேஷ்வரி.

பதி...:)