Wednesday, June 3, 2009

குடகு மலைப்பயணம் - 2இ

தடியண்டமோல் – குடகு மலையிலுள்ள உயர்ந்த மலைஉச்சி ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடந்துதான் செல்ல முடியும். உச்சிக்கு சென்றுவர சாதாரணமாக ஆறு மணிநேரமாவது ஆகும். மழைகாலமாக இருந்தால் வழியெங்கும் இரத்தம் சுவைக்கும் அட்டை பூச்சிகள் நிறைந்திருக்கும். அவற்றை நினைத்தாலே மனதினுள் பயம் எப்போதுமே உண்டு. நல்லவேளையாக நாங்கள் சென்ற காலத்தில் அவை எதுவும் இல்லை என்று கேள்விபட்டதால், நிம்மதியாகவும், ஆசையாகவும் உச்சி நோக்கி நண்பர்களுடன் செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் எங்கள் நண்பர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் சென்றுவிட்டது. ஆகையால் செல்லும் வழியில் சிறிய மருத்துவமனையில் ஓய்வும், மருந்துகளும் கொடுத்து உடல் நிலையை தேற்றி தடியண்டமோல் நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.

மலை அடிவாரத்தில் உள்ள பேலேஸ் எஸ்டேட் என்னும் இடத்தில் எங்கள் விசையுந்துகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் செல்லும் வழிகேட்டு அறிந்துகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அப்போதே மதியம் மணி மூன்றாகிவிட்டது. உச்சி சென்றுவர ஆறு மணி நேரமாவது ஆகும் என கேள்விபட்டுள்ளோம். இருளில் சென்றுவருவது என்பது மிகவும் சிரமமான விடயமாகும். ஆகையால் எவ்வளவு விரைவாக சென்றுவர முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவர முடிவு செய்து வேகவேகமாக மலையேர துவங்கினோம்.



அழகான காட்சிகள் கண்முன் விரிந்த வண்ணம் இருந்தன. ரசித்து கொண்டே ஏறிக்கொண்டிருந்தோம். எங்கள் மலையேறும் ஆசையில் சுமார் 60 சதவிகிதம்தான் முடித்திருப்போம். நேரம் பார்க்கையில் இருள்வர ஒரு மணிநேரம்தான் இருந்தது. இதற்கு மேலும் மலையில் ஏறிக்கொண்டிருந்தால் கீழிறிங்க முடியாது என்று தோன்றியதால், சிறிது நேரம் அந்த உயரத்திலேயே அமர்ந்து அழகினை ரசித்து கொண்டிருந்தோம்.



அனைவருக்கும் அந்த அழகினை காண்பிக்க பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். சில மணித்துளிகள் மகிழ்வாக அங்கே கழித்துவிட்டு கீழிறங்க ஆரம்பித்தோம். எஸ்டேட் வந்துசேரும்போது இருட்டியேவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் கிடைத்திருந்தால் உச்சிக்கு சென்று வந்திருக்கலாம். சில காரணங்களால் சில மணித்துளிகள் எங்களுக்கு விரயமானது.மற்றொரு முறை அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது. அந்த எஸ்டேட்டில் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல மும்பையிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியோடு அளவளாவிக்கொண்டிருந்தோம். அங்கு வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். அந்த சூழலும், அமைதியும் ஒரு புத்துணர்ச்சி அளிப்பது போல இருப்பதாக கூறினார்கள். அதுவும் உண்மைதான். அங்கு நிலவும் நிசப்தமும் நமது வாழ்க்கைக்கு ஒரு புதுவித அர்த்தத்தை அளிக்கின்றது. இயந்திர வாழ்விலிருந்து விடுபட அந்த மாதிரியான சூழல் மிகவும் சிறந்ததாகும். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீராச்பெட் நோக்கி பயணமானோம்.

3 comments:

பதி said...

இதுக்கும் ஒரு :) போட்டுக்கறேன்!!!!!!!!!

Anonymous said...

விசையுந்துனா என்ன?

மணிநரேன் said...

போட்டுக்கோ பதி.

மயில்..
விசையுந்து - Motorbike . wiktionary-இல்
கொடுத்திருந்த தமிழ் வார்த்தை அதுதான்.