Thursday, November 5, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - இ

சூளிச்சிலிருந்து ஒரு நாள் பயணமாக லக்ஸம்பர்க் நகரத்திற்கு/நாட்டிற்கு சென்று வந்தோம். சூமேக்கர் என்னும் ஒரு பயண ஏற்பாட்டாளர் மூலம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். எனவே பயணம் சிறிதளவு எளிதாக இருந்தது. சுமார் மூன்று மணி நேர பேருந்து பயணம். நாங்கள் சென்றது செவ்வாய்கிழமையாதலால் அதிகம் முதியோர்களை எங்கள் பேருந்தில் பார்க்க முடிந்தது. பயணம் துவங்கிய சிறிது நேரத்திலேயே விருந்தாக பல காட்சிகள் கிடைக்கப்போவது உறுதி என்று மனதில் தோன்றியது. இந்த விடயத்தில் தோன்றியது உண்மையாகவே அமைந்தது. வழியின் இரண்டு பக்கங்களிலும் செழிப்பான பசுமை. கூட்டம் கூட்டமாய் சிறு சிறு காடுகள் போல மரங்களும், புல்வெளி மைதானங்களும், விளை நிலங்களும் என்று மாறி மாறி வழியெங்கும் வியாபித்திருந்தது.


சுமார் பன்னிரெண்டரை மணியளவில் அந்த நகரின் மையப்பகுதியில் இறக்கிவிடப்பட்டோம். அந்த இடத்தில்தான் எவ்வளவு சுற்றுலா பயணிகள். பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்ட வண்ணம் இருந்தன. சுற்றுலா துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரசுற்றுலா பேருந்தில் சுற்றிப்பார்க்க சென்றோம்.





ஹாப் ஆன்-ஹாப் ஆப் என்னும் வசதி கொண்ட பேருந்துகள் இவை. அதாவது எங்கு வேண்டுமானாலும் ஏறி-இறங்கிக்கொள்ளலாம். ஆகையால் நமக்கு விருப்பமான இடங்களை இறங்கி பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் வந்து கொள்ளலாம். முதலில் சுமார் ஒரு மணி நேரம் முழுநகரையும் சுற்றி வந்தோம். அப்போதே எங்கெல்லாம் திரும்ப வரவேண்டுமென முடிவு செய்துகொண்டோம். நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால் அரச மாளிகை, பூங்கா, கோட்டை என்று முக்கியமான சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. மாளிகையின் உள்ளே செல்லவும் அந்த நேரம் உகந்தபடியில்லாததால் வெளியிலிருந்து சுற்றிப்பார்த்தோம்.





வார்த்தைகளால் விவரிக்க முடியாத விடயங்களையும் படங்கள் விவரித்துவிடும். எனவே புகைப்படங்களில் அங்கே கண்ட அழகை கையகப்படுத்திக்கொண்டோம். அங்கே கண்ட அழகினைவிடவும் மிகவும் கவர்ந்தது அங்கு சென்ற வழியில் கண்ட பசுமைதான் என்றால் மிகையாகாது. திரும்பி வரும்போது நகரின் வெளியே பேருந்தினை சில நிமிடங்கள் நிறுத்த இயற்கையை ஆற-அமர்ந்து இரசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. கண்டவற்றை அசைபோட்டுக்கொண்டே அந்த நாள் இனிதே நிறைவுற்றது.


ஹான்னோவரிலுள்ள இரண்டு நண்பர்களை காண ஒரு வார இறுதியில் நாங்கள் மூவரும் சென்று வந்தோம். பயணத்தில் அதிக நேரம் செலவானது. அங்கு இருந்ததோ சுமார் 27 மணி நேரங்கள்தான். எனினும் மிகவும் மகிழ்வாக இருந்தது. நாங்கள் ஐவரும் சில வருடங்களுக்கு பின்னர் ஓரிடத்தில் சந்திக்கின்றோம். ஆகையால் பல விடயங்களை அசைபோட்டு, பேசி என்று மகிழ்வாக சென்றது. நினைவில் என்றும் நிலைத்திருக்கும் தருணங்களில் இவையும் ஒன்றாக அமையும்.

4 comments:

பதி said...

:-)))

அருமையா வந்திருக்குது மணி, படங்களும் அதற்கான விவாரணைகளும் !!!!

மணிநரேன் said...

பதி...நன்றி.

சந்தனமுல்லை said...

படங்கள் அருமை! அங்கே செல்லத் தூண்டுகிறது! :-)

மணிநரேன் said...

நன்றி முல்லை.