Tuesday, September 7, 2010

காத்திருந்த பயணம் - அ

பயணங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கும் விடயம். சில இடங்களுக்கு நினைத்தவுடன் சென்றுவர முடிந்துவிடுகிறது; சில இடங்களுக்கு ஒருசில மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பயணத்தை பொறுத்தவரை சுமார் முப்பது வருட காத்திருப்பு இதன் பின்னால் இருந்துள்ளது. சென்ற ஆண்டு திசம்பரில் நான் ஊருக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் இம்முறை எப்படியேனும் இந்த பயணத்தை மேற்கொண்டுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.அவ்வாறு நாங்கள் செல்ல விரும்பியது எங்கள் குலதெய்வ கோயிலுக்கு.

கூந்தலூர் - கும்பகோணம் (குடந்தை) அருகில் எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள அம்மன்தான் குலதெய்வம்.இத்துனை ஆண்டுகளில் பலமுறை குடந்தைக்கும், சொந்த ஊரான மயிலாடுதுறைக்கும் சென்று வந்திருந்தாலும் கூந்தலூர் செல்வது மட்டும் கைகூடாமலேயே இருந்தது. எல்லாவற்றிற்கும் நேரங்காலம் வரவேண்டுமென்று சொல்வது உண்மையோ என்று எண்ணவைக்கிறது.

குடந்தையை அடித்தளமாக வைத்து பயண ஏற்பாடுகள் செய்யத்துவங்கினோம். சில நெருங்கிய உறவுகளையும் அழைத்துக்கொண்டோம். இரயிலில் இடம் கிடைக்காததால் வேன் எடுத்துச்செல்வது என்று முடிவாயிற்று. நான்கு குடும்பமாக சென்னையிலிருந்து கிளம்பி குடந்தையிலுள்ள அத்தையின் வீட்டிற்கு செல்வது என முடிவாயிய்று. ஒரு பொடியனுக்கு உடல் நலமில்லாததால் அந்த குடும்பம் எங்களுடன் வரமுடியவில்லை. குடந்தைக்கு தனியாக வண்டியெடுத்து செல்வதால் செல்லும் வழியில் வடலூர் சென்றுவிட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.வடலூர் இராமலிங்க அடிகளார் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் ஒருவித பற்று சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தைக்கு ஏற்பட்டது.ஆகையால் வடலூர் செல்ல வேண்டும் என்ற அவாவும் சில ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. அது நிறைவேறவும் இதுதான் உற்ற சமயம் போன்று தோன்றியது.

திசம்பர் 12.ஆம் தேதி காலையில் நாங்கள் ஏழு பேர் சென்னையிலிருந்து கிளம்பினோம்.வழியில் எடுத்து சென்ற காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சுமார் பதினோரு மணியளவில் வடலூர் சென்றடைந்தோம். முதன்முறையாக சென்றதாலும், குறிப்பிட்ட கால அவகாசமே இருந்ததாலும் சத்திய ஞான சபைக்கு மட்டுமே சென்றோம். சென்ற நேரம் சந்நிதி மூடப்பட்டிருந்தாலும் அடுத்த அரை மணிநேரத்தில் திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் கூறியபடியால், தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தீர்ந்தது. அங்கு குழுமியிருந்தவர்களில் வயதான ஒருவர் தொடர்ந்து சுவாமிகளின் பாடலை பாடிக்கொண்டிருந்த்தார். அந்த நிலையிலேயே அவரை புகைப்படம் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.




குறித்த நேரத்தில் தீப தரிசனம் கிடைக்கப்பெற்றோம். மிகுந்த நிறைவாக இருந்தது.சிறிது நேரம் அந்த வளாகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு குடந்தை நோக்கி பயணமானோம். செல்லும் வழியில் சில ஆச்சிரியமான விசயங்களும் அறியெப்பெற்றேன். ஏதோ பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அந்த பாட்டை பள்ளியில் பாடி முதல் பரிசு வாங்கியதாக எங்கள் அம்மா கூறினார். இன்பதிர்ச்சி. அம்மாவிற்கு இசையில் நாட்டமுண்டு, பாடவெல்லாம் தெரியும் என்பதே அப்போதுதான் எங்களுக்கு தெரியும். மேலும், ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் என் தம்பி அந்த விசயத்தைபற்றி சில விடயங்கள் சொன்னான். அவனுக்கும் அந்தமாதிரியெல்லாம் பேசமுடியும் என்பதையே நாங்கள் அப்போதுதான் கண்டோம். அவன் எப்போதும் விளையாட்டுத்தனமாய் இருப்பதால் பல விடயங்கள் அவனுக்கு தெரியாது என்று நாங்கள் தவறான கணக்கு போட்டு வைத்திருந்தோம். சில தெரியாத விடயங்கள் இந்த பயணத்தில் அறியப்பெற்றோம். குடந்தையில் அனைவரையும் ஓராண்டிற்கு பின்னர் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சுவையான உணவுடனும், அளவளாவலுடனும் மதிய நேரம் கழிந்தது.

கூந்தலூர் செல்வது பிரதானமாக இருந்தாலும் அதனூடே பல ஆலயங்களுக்கும் செல்வதும் எங்களின் திட்டமாக இருந்தது. பலமுறை குடந்தை சென்றிருந்தாலும் வெகுசில ஆலயங்களுக்கே இதுவரை சென்று வந்துள்ளோம். ஆகையால் அன்று மாலை அங்கிருந்த சில உறவுகளையும் அழைத்துக்கொண்டு தாராசுரம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை ஆகிய தலங்களுக்கு சென்றோம். அதுவரை தெளிவாக இருந்த வானிலை தாராசுரத்தில் இறங்கியவுடன் மாறத்துவங்கி மழை தூற ஆரம்பித்துவிட்டது.

தாராசுரம் பல சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சிவத்தலமாகும். இதற்கு முன்னர் எப்போது சென்றேன் என்பது நியாபகமில்லை. மேலும், இம்முறைதான் புகைப்படக்கருவி இருந்தது. ஆகையால் நிறைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டிருந்தேன். மழை வந்து அந்த ஆசையை குலைத்துவிட்டது. எனினும் குடைக்குள்ளிருந்து வெகுசில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆலயத்தில் அங்குமிங்குமாக சில மக்களை மட்டுமே காண முடிந்த்தது. இவ்வாறான ஊர்களில் உள்ள கோயில்களில் சாதாராண நாட்களில் செல்வதிலுள்ள ஒரு வசதியெனில் அது அதிக கூட்டமில்லாமையாகும். அதனால் அடித்துபிடித்து முன்டியடித்து தரிசனம் செய்யத்தேவையில்லை. போங்க-போங்க என்று விரட்டும் மனிதர்களும் இருக்கமாட்டார்கள்.ஆகையால் நின்று நிதானமாக நிம்மதியான தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.




பின்னர் அங்கிருந்து கிளம்பி பட்டீஸ்வரம் சென்றடைந்தோம். அங்கே வாசலிலேயே வீற்றிருக்கும் துர்க்கையம்மன் பிரசித்தமாகும். அந்த மாலைவேளையில் மிகுந்த அலங்காரத்துடன் அழகாக காட்சியளித்தார். பிற சந்நிதிகள் கோயிலின் உட்புறத்தில் இருந்தது. சென்றுவந்தோம். அமைதியாக அதிக ஆள்நடமாட்டமில்லாமல் இருந்தது. மழை தூறிக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு திருவலஞ்சுழி சென்றோம்.

திருவலஞ்சுழியில் வெள்ளை விநாயகர் பிரசித்தம். சென்ற நேரம் மின்சாரம் தடைப்பட்டுபோனது. கற்பூர தீபயொளியில் நிறைவான காட்சி கிடைக்கையில் மின்சாரமும் வந்து அந்த நிமிடத்தை மேலும் நிறைவாக்கியது. விநாயகர் சந்நிதியே வாசலிலிருந்து நல்ல தூரத்தில் இருக்கும். பின்னர்தான் தெரிந்தது அதன்பின்புறம் சிவப்பெருமான் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் மேலும் உள்ளடங்கி இருப்பது. சென்று தரிசித்து வந்தோம். தீபங்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாராசுரம் போல இங்கும் மனித நடமாட்டம் இல்லை. இதுதான் கிராமங்களிலுள்ள கோயில்களின் நிலை பெரும்பாலும். ஆலயங்களை கட்டிய அரசர்கள் என்ன நினைப்பில் இவற்றை எழுப்பியிருப்பார்கள். அவர்கள் இன்றைய நிலையில் இக்கோயில்கள் இருப்பதை பார்த்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கபோவதில்லை. எத்துனை மக்கள் இவ்வாறான ஆலயங்களுக்கு வந்து சென்றிருக்க வேண்டும். இப்போது எப்படியுள்ளது.... அங்கிருந்து சுவாமிமலை முருகனை தரிசிக்க சென்றோம். கிட்டத்திட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் சென்றேன். சுவாமிநாதனின் அருமையான தரிசனம் கிடைக்கப்பெற்றோம். அனைவருக்கும் மனம் மிகவும் மகிழ்வாய் இருந்தது.அன்றைய தினத்தை அங்கிருப்பதிலேயே பெரியவரின் பிறந்தநாளை கொண்டாடியும், அடுத்த நாள் கூந்தலூர் செல்வதற்கான ஏற்பாடுகளை முடித்துக்கொண்டும் உறங்கச்சென்றோம்.

(பி.கு.: கடந்த ஆறு மாதங்களாக எழுத நினைத்து கடந்த இரண்டு நாட்களில் எழுதிய பயணத்தொடரின் முதல் பகுதி.)

4 comments:

துளசி கோபால் said...

ஆஹா...கூந்தலூரா!!!!

நெருங்கிய தோழி அங்கே இருக்காங்க. பார்த்தே 37 வருசமாச்சு. தொடர்பும் இல்லை.

இந்தியா வரும்போது சிலமுறைகள் முயற்சித்தும் கூந்தலூர் போக வாய்க்கவே இல்ல.:(

தொடர் நல்லா இருக்குதுங்க.

மணிநரேன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க துளசி கோபால்.

கையேடு said...

தாராசுரம், பட்டீஸ்வரம், பழையாறுன்னு எல்லா கோயில்களிலும் விளையாடியிருக்கிறேன் ஆனா, உள்ள யார் இருக்காங்கன்னு கவலைப்பட்டதேயில்லை, அப்போ அது தேவையும் இல்லாமல் இருந்தது. (இப்போ மட்டும்னு சொல்றது கேக்குது..)

பயணக்கட்டுரை அருமை மணி, ரொம்ப கஞ்சப்படாம விரிவா எழுது மணி..

மணிநரேன் said...

வா இரஞ்சித்.